Wednesday, April 24, 2024

அமேசிங் பிரிட்டன் -8- சௌத்போர்ட்- பிரிஸ்டல்- பாத் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 316ல் வெளிவந்துள்ள பயணக்கட்டுரைத் தொடரின் எட்டாம் பாகம். சௌத்போர்ட்- பிரிஸ்டல்- பாத் பயணக்குறிப்புகள்

 

பயணங்களில் நம்மை அறியாமலே சில இடங்கள் மிகவும் பிடித்து விடும். இந்தப் பயணத்தில் பார்க்கும் இடங்கள் எல்லாமே அப்படித்தான் இருந்தது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று நிலத்திணைகள் ஒவ்வொன்றும் அத்தனை அழகாக பரந்து விரிந்து கிடக்கிறது. நாமே வண்டி ஓட்டிச் சுற்றிப்பார்க்கும் நாடுகளில் ‘யூகே’யும் ஒன்று. அதனால் தானோ என்னவோ ஒவ்வொரு நிலப்பரப்பும் எங்களை மிகவும் கவர்ந்தது. நினைத்த இடத்தில் வண்டியை நிறுத்திச் சுற்றிப்பார்த்துக் கொண்டே சென்றதில் பல விஷயங்களும் தெரிந்தது. பெருநகரங்களை விடுத்து உட்புற கிராமங்களில் பெரும்பாலும் ஆங்கிலேயர்கள் மட்டுமே தென்பட்டனர். அமெரிக்காவைப் போல வீடுகளில் பெரிய வண்டிகள் நிறைந்து இல்லாமல் சிறிய வண்டிகள் இருந்ததும் மக்கள் போக்குவரத்திற்கு அதிகம் பேருந்துகளைப் பயன்படுத்துவதையும் பார்க்க ஆறுதலாக இருந்தது. மொத்தத்தில் மக்கள் தொகை குறைவாக இருப்பதால் காடுகளும், நீர் நிலைகளும் பிழைத்துக் கிடக்கிறது. இப்படி பலவாறு பார்த்த விஷயங்களைப் பேசிக்கொண்டே ‘சௌத்போர்ட்’ டிலிருந்து ‘பிரிஸ்டல்’ நோக்கிய எங்கள் பயணம் தொடர்ந்தது.

சௌத்போர்ட்-ல் நாங்கள் தங்கியிருந்த ‘Arthur’s of churchtown’ விடுதியின் கீழே அழகான மதுக்கூடம். மாடியில் விசாலமான அறைகளுடன் தங்க வசதிகள் செய்திருந்தார்கள். இந்தப் பயணத்தில் ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு விடுதியில் தங்கியதில் வெவ்வேறு அனுபவங்கள்! எனக்குத் தான் தெரியாத ஊரில் எங்கெங்கோ அறையைப் போட்டுத் தேடிப் போனதில் கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால் இந்த அனாவசிய பயம் தேவையில்லை என்பதை அங்குச் சென்றவுடன் புரிந்து கொண்டேன். சாலையோர விடுதி. எதிரே துரித உணவுக்கடைகள். நல்ல வசதியாகத்தான் இருந்தது. காலையில் ஒரு பெரிய பைக்கர்ஸ் கூட்டம் பெரிய பெரிய பைக்குகளில் விடுதி வாசலில் நின்று கொண்டிருந்தார்கள். பார்த்தவுடன் ஈஷ்வருக்கு ஒரே குஷி. அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அவர்களும் சினேகமாகப் பேசினார்கள். நான் பார்த்தவரையில் இந்த ‘பைக்கர்கள்’ பார்க்க முரட்டுத்தனமாக இருந்தாலும் சக பைக்கர்களுடன் மிகவும் பாசத்துடன் இருக்கிறார்கள். உதவி என்றால் ஓடோடி வந்து கைகொடுக்கிறார்கள். ‘நீ நம் இனம்’ என்று ஒரு பாசம் இழையோடுகிறது!

அவர்களுக்கு ‘பை, பை’ சொல்லிவிட்டு, மெக்டொனால்ட்ஸில் காலை உணவை முடித்துக் கொண்டோம். அருகிலிருந்த கடையில் பழங்கள், ரொட்டிகள், நொறுக்குத்தீனிகளையும் வாங்கிக்கொண்டோம். கருமேகங்களும் பச்சைப்பசேல் மலைகளும் துணை வர, குறுகிய சாலைகளில் அன்றைய பயணம் தொடர்ந்தது. மழைக்கால மஞ்சள் நிற மலர்கள் பூத்துக் குலுங்க, ‘வெல்ஷ்'(Welsh) கிராமப்புறப்பகுதிகள் இயற்கை அழகுடன் வசீகரிக்கிறது. அந்த மலர்களைப் பார்த்தவுடன் தன் ஆஸ்தான கவிஞனின் கவிதையை மீண்டும் கூறினார்.

வழியில் ஒரு சிறிய ஊர் தெரிய, யோசிக்காமல் ‘சடக்’கென்று ஈஷ்வர் வண்டியை உள்ளே ஓட்டிச் சென்று விட்டார்.

“நேரமானாலும் பரவாயில்லை. மெதுவாக நடந்து சுற்றிப்பார்த்து விட்டு வருவோம்.”

அவருக்கு தான் படித்த ஆங்கில நாவல்களில் வரும் கிராமங்களையும் தெருக்களையும் வீடுகளையும் பார்க்க வேண்டும் என்று ஆசை. வீடுகளில் ஆட்கள் இருக்கிறார்களா என்று சந்தேகப்படும்படியாக தெருக்கள் அமைதியாக இருந்தது! ஒரே ஒரு உணவகம். அங்கே மட்டுமே ஒரு சில மனிதர்களைப் பார்த்தோம். எத்தனை அமைதியாக, அழகாக, சுற்றிலும் மலையும் அருகே குளமும் மரங்கள், செடி, கொடிகளுடனும் அடடா! “இப்படிப்பட்ட ஊரில் சில நாட்கள் தங்கியிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?” ஈஷ்வர் ஏக்கத்துடன்.

நன்றாகத் தான் இருக்கும். ஆனால், நமக்கு ‘பேசும் படம்’ போல. சரிப்பட்டு வராது😜


வழியில் ‘Stokesay Castle’ வழிகாட்டி கண்ணில்பட்டது. அழகிய மலைப்பகுதியில் அமைந்துள்ள 13ம் நூற்றாண்டாய்ச் சேர்ந்த கோட்டையை மிக நன்றாகப் பராமரித்து வருகிறார்கள். உள்ளே சென்று பார்க்க இலவசம்! கசக்குமா? நுழைவாயிலில் கல்லறை! என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை! ஐயோ யார் மீது நடந்து செல்கிறோமோ என்று பயந்து கொண்டே உள்ளே சென்றால் மஞ்சள் வண்ணத்தில் மரவேலைப்பாடுகளுடன் சிறிய கோட்டை! ‘Ludlow’வில் இருந்த செல்வந்தர் ஒருவரால் கட்டப்பட்டு பல போர்களில் இருந்து தப்பித்த கோட்டையின் கட்டடக்கலை ‘மெடீவல்’ காலத்திற்கே அழைத்துச் செல்கிறது. அங்கிருக்கும் ‘பிரதான மண்டபம்’ ஓடுகள் பதித்த மர கூரையுடன் உயர்ந்த ஜன்னல்களுடன் பிரம்மாண்டமாக இருந்தது. பிரபுக்களின் பெரிய விருந்துகள், கூட்டங்கள் அங்கு நடந்ததாகக் குறிப்பெழுதி வைத்திருக்கிறார்கள். உட்புறம் முழுவதும் உள்ள அறைகள், குறுகிய மாடிப்படிகள், இரும்புக்கதவுகளில் கைவினைத்திறனைப் பார்க்க வியப்பாக இருந்தது. கீழ்தளத்தில் மதுவைச் சேமித்து வைக்க தனியறை! பெண்கள் மாடியிலிருந்து பிரதான மண்டபத்தில் நடக்கும் நிகழ்வுகளைக் காண தனி இடம், தேவாலயம் என்று அந்தக் காலத்தில் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார்கள்! எங்களுடன் சேர்ந்து மொத்தமே ஆறேழு பேர் தான் அங்கே இருந்திருப்பார்கள்! வளைந்து வளைந்து கீழே குனிந்து நிமிர்ந்து என்று சென்று வர வேண்டியிருக்கிறது.

மழைத்தூறல் ஆரம்பிக்க, பறவைகள் கோட்டைக்குள் பதுங்க ஓடிவருவதைப் பார்க்க அழகு. ‘சிலுசிலு’ தென்றல், மழையில் நனையும் மலை, மரங்கள், கருமேகங்களை விலக்கி வெளிவர எத்தனிக்கும் சூரியன், மங்கிய மஞ்சள் வெயிலில் அசைந்தாடும் புற்கள் என்று கோட்டையிலிருந்து கண்ட காட்சிகள் அருமையாக இருந்தது! ‘Catherine Called Birdy’ என்ற ஆங்கிலப்படத்தை அங்கே எடுத்திருக்கிறார்கள் என்று அங்கே இருந்தவர்கள் கூறினார்கள். பிரபலமான கோட்டை என்றும் அறிந்து கொண்டோம்.

மழை நின்ற பிறகு அழகிய ஊரின் வழியே வீடுகளைப் பார்த்துக் கொண்டே சென்றோம். குறுகிய தெருக்கள்! ஆங்கிலப் புத்தகங்களில் வருவது போன்ற நெருக்கமான கல் வீடுகள் ஒவ்வொன்றும் கொள்ளை அழகு! பெரும்பாலும் செங்கல் பதித்த முகப்புடன் அபார்ட்மெண்ட்கள். நடுநடுவே சிறிய கடைகள். ஏதோ ஒருவித நேர்த்தி! குப்பைகளே இல்லாத உலகம்! முகத்திலறைவது போல வண்ணங்கள் அடிக்காத வீடுகள்! வார்த்தைகளில் விவரிக்க இயலாத பேரழகு கொட்டிக்கிடக்கிறது! தெருக்களில் மனித நடமாட்டம் மிகவும் குறைவு. ‘Ludlow’ ஊர் கொள்ளை அழகு. மழைக்கால கொண்டாட்டத்திற்காக மக்கள் ஓரிடத்தில் குழுமியிருந்தார்கள். சிறிது நேரம் அங்கே இளைப்பாறினோம். Ludlow Castle’ மாலை வெயிலில் ஜொலித்துக் கொண்டிருந்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை. பார்வையாளர் நேரம் முடிந்து விட்டிருந்தது. மிஸ் பண்ணிட்டோமே😞

ஷ்ராப்க்ஷயரில் 15ம் நூற்றாண்டு ‘Ludford Bridge’ மூன்று வளைவுகளுடன் அழகாக இருந்தது. வழியில் ‘சார்ல்ஸ் டார்வின்’ பிறந்த ‘ஷ்ரூஸ்பரி ‘ ஊரைப் பார்த்தவுடன் அவர் வீட்டிற்குப் போக வேண்டும் என்று ஆசையாக இருந்தாலும் முன் திட்டமிடல் இல்லாததால் சாத்தியப்படவில்லை. இருட்டுவதற்குள் ‘Clifton Suspension Bridge’ பார்த்து விட வேண்டும் என்று பிரிஸ்டல் நகரை நோக்கி விரைந்தோம்.

வழியெங்கும் பண்ணைகளில் ஹாயாக புற்களை மேய்ந்து கொண்டிருந்த கால்நடைகள். நன்றாக ‘கொழுகொழு’வென்று இருந்தது! இரட்டை வானவில் கண்முன்னே பவனி வர, ‘Hampton Castle’ஐ ஆசிர்வதித்துக் கொண்டிருந்தது வானம். இதுவும் வரலாற்றுச் சிறப்புமிக்க அழகிய கோட்டை தான். மன்னராட்சியில் இதெல்லாம் சகஜம் தான் என்றாலும் இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகும் அவற்றைச் சீராகப் பராமரித்து வருவது தான் சிறப்பு. இங்கும் பார்வையாளர் நேரம் முடிந்து விட்டிருந்தது. இத்தனை சீக்கிரமாகவா மூடுவார்கள்? ஒருவேளை கோடையில் நீண்ட நேரத்திற்குப் பார்வையாளர்களை அனுமதிப்பார்களோ என்னவோ? உள்ளே முடிந்தவரை நடந்து சுற்றிப்பார்த்தோம். திருமண நிகழ்ச்சி ஒன்று நடக்கவிருக்கிறது போல. வண்டிகள் வரிசையாக வர, பெட்டிகளுடன் பெரும்கூட்டம் உள்ளே சென்று கொண்டிருந்தது. பார்ப்பதற்குத் தமிழ் மக்கள் போல தெரிந்தாலும் ஒருவேளை இலங்கைத்தமிழர்களாக இருப்பார்களோ என்று நினைத்துக் கொண்டோம். வெள்ளையர்கள் சிலரும் சென்று கொண்டிருந்தார்கள். அரண்மனையில் திருமணம்! பெரிய ஆளுங்க தான் போல! ம்ம்ம்ம்ம்…

மீண்டும் நீண்ட அழகான சாலைகளில் பயணம். மழை துரத்த ஆரம்பித்து விட்டது. கருமேகங்கள் கூடுவதும் கலைவதுமாய் வானில் கண்ணாமூச்சி ஆட்டம் ஆட, நாங்களும் இப்பொழுது இங்கிலாந்தின் ‘திடீர்’ மழைக்குப் பழகியிருந்தோம். மழை நின்றவுடன் இந்த உலகமே புத்துணர்ச்சி பெற்றது போன்ற அழகுடன் சொக்கி நிற்பதைப் பார்க்க அதுவும் ஈர சாலைகள், நீர் சொட்டும் மரங்கள் மனதிற்கு இதமாக இருக்க, ‘மாலையில் யாரோ மனதோடு பேசினார் …’ ஸ்வர்ணலதா😍

ஏழரை மணிபோல ‘ஏவான்’ ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள பிரிஸ்டல் நகரதிற்கு வந்து சேர்ந்து விட்டோம். கலாச்சார பன்முகத்தன்மை, வரலாற்று முக்கியத்துவம், வளமான கடல்சார் பாரம்பரியத்திலிருந்து பரபரப்பான நகர வாழ்க்கை என்று பிரபலமாக இருக்கிறது இந்நகரம். இதன் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்றான ‘கிளிஃப்டன் தொங்கு பாலம்’, நகரின் பொறியியல் திறமைக்குச் சான்றாக நிற்கிறது. ‘இஸம்பார்ட் கிங்டம் ப்ரூனெல்’ வடிவமைத்து 1864ல் கட்டி முடிக்கப்பட்ட கம்பீரமான பாலம் இரண்டு கற்கோபுரங்களுக்கு இடையே தடிமனான இரும்புச் சங்கிலிகளால் தாங்கி பிடிக்கப்பட்டுள்ளது. ஏவான் ஆற்றின் குறுக்கே பாலத்தின் மீது கடந்து செல்லும் பொழுது பயம் வரத்தானே செய்யும்? உண்மையாகவே ‘Engineering marvel’ தான்.

கடந்து செல்லும் வண்டிகள் கப்பம் கட்டிவிட்டுத் தான் நகர முடியும். வண்டியை ஓரத்தில் நிறுத்தி விட்டு ஆற்றையும் கரையோரத்தில் இருந்த கோட்டை, மதுபானவிடுதிகளையும் அங்கிருந்து வந்த ஜாஸ் இசையையும் கேட்டுக் கொண்டிருந்தோம். மாலைச்சூரியன் இரவுப்போர்வைக்குள் நுழைய காத்திருந்தான். அதற்குப் பிறகு தான் பாலம் அலங்கார விளக்குகளால் ஜொலிக்கும் என்றார்கள். பாலத்தைச் சுற்றி நடந்து செல்ல பாதை இருக்கிறது. நடந்து அருகிலிருந்த பூங்காவிற்கும் சென்றோம். சூரியன் அஸ்தமனமாக, பாலத்தில் விளக்குகள் போடப்பட்டு ஜொலித்தது. பிரிஸ்டல் நகரின் சிறிய தெருக்களையும் அழகிய கட்டடங்களையும் வரிசையாக நிறுத்த வைக்கப்பட்டிருந்த சிறிய வண்டிகளையும் அமைதியான தெருக்களையும் கடந்து,

நாங்கள் முன்பதிவு செய்திருந்த விடுதிக்கு வந்து சேர்ந்தோம். வண்டியிலிருந்து பெட்டிகளை எடுத்துச் சென்றார்கள். நுழையும் பொழுது ஒரு குட்டி ‘ஸ்னாக்’ என்ன? வரவேற்பு எல்லாம் பலமாக…ம்ம்ம்ம்ம். கொடுக்கிற பணத்துக்கு நல்ல மரியாதை தான். வெளியே திருமண நிகழ்ச்சி பார்ட்டி ஒன்று படுஜோராக நடந்து கொண்டிருந்தது. அருமையான இடத்தில் இருந்த விடுதியில் காலை உணவின் விலையைக் கேட்டால்😮

சௌத்போர்ட்டிலிருந்து பிரிஸ்டல் வந்து சேர மூன்றரை மணிநேரம் தான் என்றாலும் வழியில் ஏகப்பட்ட மண்டகப்படிகள் ஏறி இறங்கியதில் ஒருநாள் சென்றதே தெரியவில்லை! நாளைய பயணம் முற்றிலும் வேறு உலகத்திற்கு அழைத்துச் சென்று விடும். ஆவலுடன் உறங்கச் சென்றோம்.

மறுநாள் காலையில் ‘சாவகாசமாக எழுந்திருந்து பாத்’ நகருக்கு கிளம்பினோம். நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து முக்கால் மணி நேரப்பயணம் மட்டுமே. சிறு ஊர்களின் வழியே சென்றதால் பல இடங்களில் எதிரே வரும் வண்டிகளுக்காக காத்திருந்து வழி விட்டுச் செல்ல வேண்டியிருந்தது. அத்தனை குறுகிய சாலைகள். வீடுகளின் வெளிசுற்றுச்சுவருக்குப் பதிலாக நெருக்கமாகச் செடிகளை வளர்த்து அழகாக வெட்டியிருந்தார்கள். சில வீடுகளில் அயர்லாந்தைப் போல கற்களாலேயே சுற்றுச்சுவர் எழுப்பியிருந்தார்கள்.எங்கே கார் அவற்றை உரசிக்கொண்டு சென்று விடுமோ என்ற அளவுக்குப் பக்கத்தில் சென்று கொண்டிருந்தது. அப்பொழுதெல்லாம் கண்களை இறுக மூடிக்கொண்டேன். ‘பாத்’ நகரை நெருங்கும் பொழுது தெரிந்த வீடுகள் எல்லாம் குட்டியாக அழகாக இருந்தது. நெருக்கமாக பெரிய அடுக்குமாடி வீடுகள். கட்டணம் கட்டி வண்டியை ஓரிடத்தில் நிறுத்தி பார்க்க வேண்டிய இடங்களுக்கு கால்நடையாகச் சென்று விடலாம் என்று திட்டம். பார்க்கிங் கிடைப்பது தான் கடினமாக இருந்தது. கோடைகாலத்தில், விடுமுறை நாட்களில் இதுதான் பிரச்சினையாக இருக்கும் போல! ரயில், பேருந்து வசதிகள் இருப்பதால் பெரும்பாலான மக்கள் அதில் பயணிக்கின்றனர்.

சரியாக மதிய நேரத்திற்கு வந்து சேர்ந்து விட்டோம். அது ஒரு தனி உலகம் போல மாறுபட்ட கட்டடங்களுடன் மிக மிக அழகாக இருந்தது. உள்ளே பல இடங்களில் வண்டிகள் செல்ல முடியாது. எங்குப் பார்த்தாலும் உணவு, உடை, விதவிதமான பொருட்களை விற்கும் கடைகள்.ஏதோ கோட்டைக்குள் நுழைந்தது போன்ற உணர்வு.

ரோமானியர்களின் நகரமாக இருந்து பல வருடங்கள் புறக்கணிக்கப்பட்ட நகரம் இன்று இங்கிலாந்தின் அழகிய நகரங்களில் ஒன்றாகி உலகெங்கிலும் இருந்து பயணிகள் வந்து செல்லும் இடமாக மாறியுள்ளது. அதன் அழகான ஹனிஸ்டோன் ஜார்ஜிய கட்டிடக்கலையும் புகழ்பெற்ற ரோமானிய குளியலும் இங்கு மிகவும் பிரபலம். இயற்கையான வெப்ப நீரூற்றுகளின் மருத்துவ குணங்களை அறிந்த ரோமானியர்கள் கிபி 70ல் இங்கே பல குளியல் இல்லங்களை நிறுவி ‘ஸ்பா'(Spa) நகரமாக உருவாக்கியுள்ளனர். செல்வந்தர்களும் செல்வாக்கு மிக்கவர்களும் வந்து சென்று கொண்டிருந்த இடம், 18 ஆம் நூற்றாண்டில் ‘ஜான் வூட் தி எல்டர்’, ‘ஜான் வூட் தி யங்கர்’ கட்டிடக் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்ட பல நேர்த்தியான கட்டிடங்கள், தெருக்கள், பொது இடங்களால் பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது. இதன் கலாச்சாரத்தையும் கட்டிடக்கலையையும் அங்கீகரித்து உலக பாரம்பரிய தளமாக ‘யுனெஸ்கோ’ பட்டியலிட்டுள்ளது.

பார்க்க வேண்டிய இடங்கள் பல இருந்தாலும் ரோமன் குளியல், ராயல் கிரசண்ட், பாத் ஆபி, ஜேன் ஆஸ்டன் மையம் குறிப்பிடத்தக்கதாகும். கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ரோமானிய குளியல் மூலம் ‘பாத்’ நகரம் அதன் பெயரைப் பெற்றுள்ளது. நகரத்தின் அசல் பெயர் “அக்வே சுலிஸ்”.லத்தீன் மொழியில் “சுலிஸின் நீர்”. சுலிஸ் என்பது வெப்ப நீரூற்றுகளின் செல்டிக் தெய்வத்தின் பெயர். கி.பி ஒன்றாம் நூற்றாண்டில் பாத்திற்கு வந்த ரோமானிய குடியேற்றவாசிகள் அவளைத் தங்கள் சொந்த தெய்வமான மினெர்வாவுடன் அடையாளப்படுத்திக் கொண்டனர். இரு பெண் தெய்வங்களையும் போற்றும் வகையில் இந்த நகரத்திற்கு “அக்வே சுலிஸ் மினெர்வா” என்று பெயரிட்டுள்ளனர்.

இங்கிருக்கும் இயற்கை வெந்நீர் ஊற்றுகளை ஆங்கிலேயர்கள் “பாதன்” என்று அழைத்து காலப்போக்கில், ‘பாத்’ என்று பெயர் உருமாறியிருக்கிறது. ரோமானியர்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்த பிறகு ஆங்கிலோ-சாக்ஸன்ஸ் வசம் சென்ற நகரம், பின் வைகிங்ஸ் வீழ்ச்சிக்குப் பிறகு ஆங்கிலேய மன்னர்கள் வசம் வந்துள்ளது. ஒவ்வொரு கால கட்டத்திலும் இழந்தது போக, எஞ்சியவற்றை மீட்டெடுத்து வைத்திருக்கிறார்கள். இன்றும், ‘பாத்’துக்கு வருபவர்கள், ரோமானிய குளியல் பகுதிகளையும், ரோமானிய கோவில், கோட்டை, நகரச் சுவர்களைக் காண முடிகிறது. முறையாக ஆவணப்படுத்தி பார்வையாளர்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் ஒலி,ஒளிக்காட்சிகளாக வழங்கிவருவது சிறப்பு.

விடுமுறை ஆரம்பிப்பதற்கு முன்பே அங்கு அத்தனை கூட்டம். விடுமுறையில் கேட்கவா வேண்டும்? பல நாடுகளில் இருந்து பழமொழி பேசும் பலவிதமான மனிதர்கள்! பெண்கள் அழகாக உடைகளை அணிந்து ஹாலிவுட் தோற்றுப் போகும் அளவிற்கு மேக்கப் போட்டுக் கொண்டு… அப்படியே எதையாவது வாங்கி கொறித்துக் கொண்டே அவர்களை வேடிக்கை பார்க்கலாம் போல. சிறிது நேரம் அதையும் செய்து கொண்டிருந்தோம். அது வேறுலகம் தான்!

‘ரோமன் பாத்ஸ் ஆர்ச்வே’ என்று அழைக்கப்படும் ‘ஆர்ச்வே’, ‘பாத்’தின் மையத்தில் உள்ள யார்க் தெரு முழுவதும் பரவியுள்ளது. ஆர்ச்வேயில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குழாய் வழியாக அருகிலுள்ள ஸ்பாவிற்கு சூடான நீரை எடுத்துச் செல்ல 1889 இல் கட்டியுள்ளார்கள்! ‘ரோமன் பாத்’ கட்டடத்தைப் பற்றி விலாவாரியாக எடுத்துச் சொல்லும் படங்களும் ஆடியோக்களும் இருப்பதால் அறிந்து கொள்ள எளிதாக இருந்தது. அந்தக்கால வாழ்க்கையைச் சித்தரிக்கும் விதமாக ரோமானிய உடையணிந்தவர்கள் நாடகமாடிக் கொண்டிருந்தார்கள். உள்ளே ரோமானிய அரசர்கள், தளபதிகளின் சிலைகளை வரிசையாக வைத்திருந்தார்கள். அங்கே நின்று விதவிதமாக போஸ் கொடுத்துக் கொண்டு படங்கள் எடுக்க கூட்டம்!பார்ப்பதற்கும் தெரிந்து கொள்வதற்கும் நிறைய விஷயங்கள் இருக்கிறது. ‘ரோமன் பாத்’ கட்டத்தைச் சுற்றிப் பார்க்க கட்டணம் வசூலிக்கிறார்கள். பணம் கட்டி செயற்கை ‘ரோமன் பாத்’தில் ஆனந்தக் குளியல் போடலாம். நம் நாட்டில் மூலிகைக்குளியல் போல 🙂

நகரின் நடுவே இருந்த காஃபி கடையில் வேண்டியதைச் சொல்லிவிட்டு நடைபாதையில் போட்டு வைத்திருந்த இருக்கையில் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தோம். நடந்து நடந்து கால்கள் சோர்வுற்றிருந்தன. அருகிலிருந்த ஸ்டைலிஷ் உள்ளூர்வாசி அம்மணி பேச்சுக்கொடுத்தார். அப்பொழுது தான் ‘ராயல் கிரசண்ட்’, ‘ஜேன் ஆஸ்டன் மையம்’, ஜேன் ஆஸ்டன் வாழ்ந்த வீடு மூன்றும் நாங்கள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து பக்கம் என்று தெரிந்து கொண்டோம். ஓய்வுபெற்ற பெண்மணி. ‘பாத்’ நகரில் பொழுதுபோக்க எங்காவது உட்கார்ந்து வேடிக்கை பார்த்தாலே போதும். வாசிப்பு பழக்கம் உள்ளவர் போல. ஆங்கில இலக்கியங்களைப் பற்றிப் பேசினார். எங்களை பற்றிக் கேட்டு தெரிந்து கொண்டார். அந்த வயதில் உற்சாகமாக இருப்பவர்களைப் பார்த்தால் நமக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்கிறது!

ஜேன் ஆஸ்டனின் பரம விசிறியான ஈஷ்வருக்கு ஒரே குஷி. அவர் வாழ்ந்த வீட்டை பார்க்க வேண்டும், மையத்திற்கும் செல்ல வேண்டும் என்று பரபரத்தார். இந்த ‘ஜேன் ஆஸ்டன்’ படுத்துற பாடு இருக்கே! ஐடியா கொடுத்த பெண்மணிக்கு நன்றி கூறி விட்டு ஏற்றமாக இருந்த தெருவில் ஜேன் ஆஸ்டன் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்து விட்டோம். தற்பொழுது பல் மருத்துவர் ஒருவர் அங்குத் தங்கி இருக்கிறார். ‘ஜேன் ஆஸ்டன்’ மைய நுழைவாயிலில் அவரைப் போன்ற ஒரு உருவச்சிலையை வைத்திருந்தார்கள். நின்று படமெடுத்துக் கொண்டார் ஈஷ்வர்! உள்ளே அவர் எழுதிய புத்தகங்கள், பரிசுப்பொருட்கள், அவரைப் பற்றின குறிப்புகள் என்று ஏராளமான விஷயங்கள். கடையில் வேலை செய்யும் பெண்களும் அவருடைய கதாபாத்திரங்களைப் போல உடையணிந்து கொண்டிருந்தார்கள். அழகிகள்!

இனிமையாகப் பேசுகிறார்கள். ‘Persuasion’ and ‘Northanger Abbey’ இரண்டிலும் பாத் நகரைத் தொடர்புபடுத்தியிருப்பார் என்று ஈஷ்வருக்கு அப்பொழுது தான் காரணம் புரிந்தது. வருடம் ஒரு முறை நடக்கும் ‘ஜேன் ஆஸ்டன் திருவிழா’வில் அவருடைய நாவலில் வரும் காதாப்பாத்திரங்களைப் போல உடையணிந்து ‘பாத்’ தெருக்களில் உலாவருவதைப் பார்க்க அவருடைய விசிறிகள் உலகெங்கிலும் இருந்து இந்நகரத்திற்கு வருகிறார்கள்! ஆகா! நினைத்தாலே இனிக்கிறதே!

அவருடைய மையத்திலிருந்து ஏற்றத்தில் நடந்து போனால் பிரபலமான ‘ராயல் கிரசண்ட்’ பிரமிக்க வைக்கிறது! ஒரே மாதிரி 30 மாடி வீடுகளை நெருக்கமாகக் கட்டி பிறை வடிவத்தில் அமைத்திருக்கிறார்கள். இதில் 114 தூண்கள் இருமாடி உயரத்தில் இருப்பது கவர்கிறது. ஜார்ஜிய கட்டிடக்கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதால் இதைக்காண மக்கள் வருகிறார்கள். நடுவே உயர்ந்த மரங்களை வைத்திருக்கிறார்கள். நாங்களும் ஆசை தீர, படங்கள், காணொளிகளை எடுத்துக் கொண்டோம்.

மீண்டும் வந்த வழியே இறங்கி தெருக்களில் சுற்றி ‘ரோமன் பாத்’ அருகே மீண்டும் வந்தோம்.

அப்பொழுது தான் ‘மதிய தேநீர் சடங்கை’ தவற விட்டுவிட்டோமே என்று ஈஷ்வருக்கு சின்ன வருத்தம். ஆங்கில நாவலில் வரும் காட்சியைப் போல ஒரு மாயத்தை ஏற்படுத்துவதற்கு மெனக்கெடுகிறார்கள். அதற்கு கொள்ளை காசு கொடுத்து வாயில் வைக்க முடியாத டீயை அலங்கரிக்கப்பட்ட மேஜைகள், இருக்கைகள், டீ தீர தீர கோப்பையை நிரப்பும் பணியாட்கள், தேநீருடன் சுவைக்க வகைவகையான இங்கிலிஷ் பிஸ்க்கோத்துகள், கூடவே இசை என்று பார்க்க, கேட்க நன்றாகத் தான் இருக்கிறது. இதற்கு முன்பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் வரிசையில் நிற்க வேண்டும். கட்டணம் வேறு! கேட்டால் வருடம் முழுவதும் தேநீர் குடிக்க பாக்கெட்டுகள் வாங்கி விடலாம் அவ்வளவு விலை! ஆனால் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை தான் இந்த மாதிரி வாய்ப்புகள் கிடைக்கும் முயற்சி செய்து இருக்கலாம் என்று வருத்தப்பட்டுக் கொண்டே இருந்தார் மனுஷன்! மகளோ, லண்டனில் உயர்தர விடுதியில் தோழிகளுடன் அதே மாதிரி ‘டீ சடங்கு’ என்று பணம் கட்டி சென்று வந்த படத்தை அனுப்பி இருந்தாள். முடிந்தால் அங்கே போகலாம் என்று சமாதானம் கூறி அங்கிருந்து நகர்ந்தோம்.

வெளியில் ‘கிடார்’ வாசித்துக் கொண்டிருந்த இளைஞன் கடந்து சென்று கொண்டிருந்தவர்களை நிறுத்திக் கேட்க வைத்தான். குழந்தை ஒன்று அழகாக நடனம் ஆடி இளைஞனை மகிழ்வித்துக் கொண்டிருந்தாள். பியரும் திராட்சை ரசமும் அருந்திக் கொண்டே மக்கள் இசையை ரசித்துக் கொண்டிருந்தார்கள். நாங்களும் ரசித்துக்கேட்டு இளைஞனுக்குப் பணத்தைக் கொடுத்து விட்டு வந்தோம். அந்த இடத்திலிருந்த கடைகளில் சில பரிசுப்பொருட்களை வாங்கிக்கொண்டேன்.

தெருக்களில் மேலும் கீழும் நடந்து கிங்ஸ் சர்க்கஸ், புல்ட்னி பாலம் பார்த்து முடித்து வண்டி நிற்கும் இடத்திற்கு வருவதற்குள் களைத்துப் போயிருந்தோம். இந்திய இளைஞர்கள் வைத்திருந்த கடைக்குச் சென்று மசாலா டீ, ‘சாட்’ ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தோம் காத்திருந்தோம் அத்தனை நேரம். சர்வீஸ் படுமோசம். வாடிக்கையாளர்களிடம் பேசக்கூடத் தெரியவில்லை. இதே மற்ற கடைகள் என்றால் தாமதத்திற்கு மன்னிப்பு கேட்பார்கள். இது வேண்டுமா அது வேண்டுமா என்று இனிக்க இனிக்க பேசி சரிக்கட்டுவார்கள். இந்த முசுடர்கள் எப்படித்தான் வியாபாரம் செய்கிறார்களோ என்றிருந்தது. சாட் நன்றாகவே இல்லை. டீ ஓகே ராகம் தான். இன்றைய நல்ல அனுபவத்தை இவர்களை நினைத்துக் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கிளம்பி வந்தோம்.

நாள் முழுவதும் நடக்கிறோம் பேர்வழி என்று வழியில் கண்டதையெல்லாம் தின்று கொண்டிருந்தோம். சந்தையில் பழங்கள் அத்தனை பிரெஷ்ஷாக இருந்தது. அதையும் விடவில்லை. வழியில் பசித்தால் எங்காவது நிறுத்திக் கொள்ளலாம். இரண்டரை மணிநேர பயணத்தில் லண்டன் போய் சேர்ந்து விடுவோம். அங்குச் சென்று கூட சாப்பிடலாம்” என்று மீண்டும் ஒரு நீண்ட சாலைப் பயணத்திற்குத் தயாரானோம்.

Wednesday, April 3, 2024

அமேசிங் பிரிட்டன் -7- கிளாஸ்கோ- கிரெட்னா கிரீன்-லேக் டிஸ்ட்ரிக்ட் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 315ல் வெளிவந்துள்ள பயணக்கட்டுரைத் தொடரின் ஏழாம் பாகம் அமேசிங் பிரிட்டன் -7- கிளாஸ்கோ- கிரெட்னா கிரீன்-லேக் டிஸ்ட்ரிக்ட் பயணக்குறிப்புகள்

ஸ்காட்லாந்தின் மிகப்பெரிய நகரமான ‘கிளாஸ்கோ’, வரலாறு, கலாச்சாரம், கலை ஆகியவற்றின் கலவையுடன் அதன் பரபரப்பான தெருக்களுக்குச் செல்லும் அனைவரையும் கவர்கிறது.

நகருக்குள் நுழைந்தவுடன் உள்ளங்களைக் கொள்ளை கொள்வது அங்கிருக்கும் பிரம்மாண்ட கட்டடங்கள் தான்! வரிசையாக இருக்கும் விக்டோரியன் மற்றும் எட்வர்டியன் கட்டிடங்கள் அந்நகரின் வரலாற்றுச் சிறப்பை எடுத்துக்காட்டுகிறது. பார்ப்பதற்கு நிறைய அருங்காட்சியகங்கள் இருந்தாலும் ஜார்ஜ் சதுக்கத்திற்கும் பழமையான தேவாலயத்திற்கும் மட்டுமே செல்வதாகத் திட்டமிட்டிருந்தோம். சிணுங்கலுடன் மழைத்தூறல் அன்றைய விடியலைத் துவக்க, காலை உணவை முடித்துக் கொண்டோம். நாங்கள் தங்கியிருந்த விடுதியில் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பெண்கள் குழுவினர் தத்தம் சைக்கிளில் மூட்டை முடிச்சுகளுடன் புறப்பட்டுச் செல்வதை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே வண்டியில் எங்களது பயணத்தைத் தொடர்ந்தோம்.

கிளம்பிய ஐந்தாறு நிமிடத்தில் ஒரு முச்சந்திப்பில் ‘படா’ரென்று சத்தம். வண்டிக்குள் மேக்கப் போட்டுக் கொண்டிருந்த எனக்கு என்ன நடந்ததென்று புரிய சில நிமிடங்கள் ஆனது😢 ஈஷ்வர் வலப்பக்கம் வண்டியைத் திருப்ப, இடப்பக்கத்திலிருந்து வந்த ஒரு வண்டி நான் அமர்ந்திருந்த பக்கம் மோதியிருக்கிறது. நல்ல வேளை! யாருக்கும் அடிபடவில்லை. வண்டியின் இடப்பக்கம் நல்ல அடி வாங்கியிருந்தது. வந்து இடித்த வண்டியும் பலத்த அடிக்கு உள்ளாகியிருந்தது! வண்டியை ஓரங்கட்டி காவல்துறையினர் வரும் வரை காத்திருந்தோம். ஈஷ்வருக்குத் தான் ஒரே சங்கடமாகி விட்டது. யார் ஓட்டினாலும் விபத்து நடக்க வேண்டும் என்றால் நடந்து தான் தீரும் என்று அவரைச் சமாதானப்படுத்துவதே பெரும்பாடாயிற்று எனக்கு😨

வெளிநாட்டில் முதன்முறையாக நடந்த விபத்து. பார்ப்பதற்கு மிகவும் இளமையான தோற்றம் கொண்ட ஆண், பெண் காவலர்கள் வந்து எப்படி நடந்தது என்று விசாரித்தனர். அமெரிக்காவிலிருந்து வருபவர்கள் ‘யுனைடெட் கிங்டம்’ல் வண்டி ஓட்டும் பொழுது வரும் சில குழப்பங்கள் தவிர்க்க முடியாதவை. ஏற்கெனவே அயர்லாந்தில் ஒட்டிய அனுபவம் இருந்தாலும் மழை, முச்சந்திப்பு என்று ஈஷ்வர் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்து விட்டார் போலிருக்கிறது. “பயப்படாதீர்கள்! இந்த மாதிரி விபத்துகள் இங்கே நடப்பது சாதாரணமான ஒன்று. உங்கள் மீது தவறில்லை.” என்று காவல்துறையினர் எங்களைச் சமாதானப்படுத்தினர். மிகவும் அன்புடன் நடந்து கொண்டார்கள். வெளிநாடு என்பதால் ஃபைன் போடவில்லை. ஊர், காப்பீடு விவரங்களைக் கேட்டுக் குறித்துக் கொண்டனர். இடித்த வாடகைக்கார் வண்டிக்காரரோ தன் மீது எந்த தவறுமில்லை என்று சொன்னாலும் முச்சந்திப்பில் வேகமாக வந்ததால் தான் அத்தனை பெரிய அடி வண்டிக்கு ஏற்பட்டது. உடனே அவருடைய சங்கத்து ஆட்களைக் கூப்பிட்டு தன் மீது தவறில்லை என்று ஓயாமல் கூறிக்கொண்டிருந்தார். பாவம்! அவருடைய வண்டி இடிபட்டு விட்டதே என்று வருத்தமாக இருந்தது. நாங்களும் அவருடைய தகவல்களை வாங்கிக் கொண்டு வண்டிகளைப் படமெடுத்து லண்டனில் இருக்கும் ‘ஈரோப்கார்’ அலுவலகத்திற்குத் தெரிவித்தோம்.

அவர்களும் மாற்று வண்டி தேவைப்படுமா என்று கேட்டார்கள். இல்லையென்றவுடன் லண்டனில் வரும் பொழுது பேசிக்கொள்ளலாம் என்று விபத்துகளைக் கவனித்துக் கொள்ளும் அலுவலக தொலைபேசி எண்ணைக் கொடுத்துப் பேசுமாறு கூறிவிட்டார்கள். நல்ல வேளை! நாங்கள் வைத்திருந்த கிரெடிட் கார்டில் காப்பீடு இருந்ததால் தப்பித்தோம். வெளிநாட்டில் வண்டி ஒட்டிப் பயணம் செல்லும் பொழுது இந்த காப்பீடு தகவல்களை அறிந்து கொண்டு செல்லுதல் நல்லது. ஈஷ்வரை எவ்வளவு சமாதானப்படுத்தினாலும் ஏதோ ஒரு குற்ற உணர்ச்சியிலேயே இருந்தார். என்ன? எனக்குத் தான் அருகே வண்டிகள் வரும்போதெல்லாம் உடல் நடுங்க ஆரம்பித்து விட்டது. இன்னும் கூட அந்த பயம் இருக்கிறது😓. நான் ஓட்டினால் மட்டுமே பயம் வருவதில்லை😔 ம்ம்ம்ம்ம்…

அங்கிருந்து கிளாஸ்கோவின் பரபரப்பான தெருக்களுக்கு மத்தியில் பெருமையுடன் நிற்கும் 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘கிளாஸ்கோ கதீட்ரல்’க்கு வந்து சேர்ந்தோம். ‘ஹை கிர்க் ஆஃப் கிளாஸ்கோ’ அல்லது ‘செயின்ட் முங்கோஸ் கதீட்ரல்’ என்றும் இந்த தேவாலயம் அழைக்கப்படுகிறது. கிளாஸ்கோவின் துறவியான செயின்ட் முங்கோ 6ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவத்தை இப்பகுதிக்குக் கொண்டு வந்த பெருமைக்குரியவர். அதனால் இந்த தேவாலயம் அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இதன் கட்டிடக்கலை, ஸ்காட்டிஷ் வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது. ஐரோப்பாவின் புராதன தேவாலயங்களின் கட்டடக்கலையும் உள்ளே இருக்கும் இசைக்கருவிகளும் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் இருக்கும். இந்த தேவாலயமும் உயர்ந்த கோபுரங்களுடனும் வண்ணங்களுடன் கூடிய கண்ணாடி ஜன்னல்களுடனும் வளைவு அமைப்புகளுடன் கவர்ந்தது. அங்கிருந்த சுற்றுலா வழிகாட்டிகள் தேவாலயத்தைப் பற்றின தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்கள். கதீட்ரலின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று அதன் (Gothic) ‘காதிக்’ கட்டிடக்கலை ஆகும். இது மெடீவல் காலத்தின் ஆடம்பரத்தையும் கைவினைத்திறனையும் பிரதிபலிக்கிறது. பிரம்மாண்டமான கட்டிடத்தைக் கட்டிய கைவினைஞர்களின் திறமைக்கும் அர்ப்பணிப்புக்கும் சான்றாக கம்பீரமான கருங்கல், நுணுக்கமான கல் வேலைப்பாடுகள் மற்றும் உயரமான வளைவுகள் கொண்ட தேவாலயம் கிளாஸ்கோவின் முக்கியமான இடங்களில் ஒன்று. இங்கு வழிபாடுகளும் நடக்கிறது. கிறிஸ்தவர்களுக்கு மிக முக்கியமான தேவாலயமாக விளங்குகிறது. பலரும் அங்கு அமைதியாக பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்.


அடுத்து நாங்கள் பார்க்க விரும்பிய இடம் ‘ஜார்ஜ் சதுக்கம்’. கம்பீரமான விக்டோரியா கால கட்டிடங்களால் சூழப்பட்ட ஜார்ஜ் சதுக்கம் பல்வேறு சின்னங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. சதுக்கத்தின் பக்கவாட்டில், கிளாஸ்கோவின் கடந்த காலத்தைச் சேர்ந்த ‘சர் வால்டர் ஸ்காட்’, ‘ராபர்ட் பர்ன்ஸ்’ மற்றும் ‘ஜேம்ஸ் வாட்’ உள்ளிட்ட முக்கிய நபர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிலைகள் மற்றும் நினைவுச்சின்னங்கள், நகரத்தின் வளமான இலக்கிய, கலை மற்றும் அறிவியல் பாரம்பரியத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் இருந்தது. அப்படித்தான் நாட்டிற்குப் பெருமை சேர்த்த மனிதர்களைக் கொண்டாட வேண்டும். இதெல்லாம் திராவிட மாடலில் வராதோ😠 அந்த மழையிலும் கணிசமான பார்வையாளர்கள் அங்கு குவிந்திருந்தார்கள். காற்றோட்டமான இடத்தில் புல்தரையில் அமர்ந்து சூழலை ஏகாந்தமாக அனுபவிக்கும் வகையில் அமைத்திருக்கிறார்கள். கோடைகாலத்தில் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும்!

கருமேகங்கள் துணை வர மீண்டும் தொடர்ந்தது சாலைப் பயணம். மழைத்தூறலில் பசுமை போர்த்திய மலைகள் நெஞ்சை அள்ள, ஒருமணி நேரத்தில் மழை நின்று நீல வானம் பளிச்சிட்டது. நாங்கள் செல்ல வேண்டிய ‘Gretna Green ‘ என்னும் காதல் கோட்டைக்கு வந்து சேர்ந்தோம். பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியங்களில் மூழ்கியிருக்கும் ஒரு வினோதமான கிராமம் இது. சமூக விதிமுறைகளை மீறி எல்லா முரண்பாடுகளுக்கும் எதிராகத் திருமணத்தில் ஒன்றுபட விரும்பிய காதலர்களுக்கு நீண்ட காலமாக ஒரு சரணாலயமாக இருந்திருக்கிறது.

‘கிரெட்னா கிரீன்’ என்பது ஸ்காட்டிஷ் எல்லையில் உள்ள ஒரு கிராமமாகும். 1754ல் இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கடுமையான திருமணச் சட்டத்தைத் தொடர்ந்து இது இளம் காதலர்களுக்கான புகலிடமாக மாறியது. காதலர்கள் 21 வயதிற்குட்பட்டவராக இருந்தால், பெற்றோரின் அனுமதியின்றி திருமணம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், எல்லைக்கு அப்பால், ஸ்காட்லாந்து அதிக தாராளவாத திருமணச் சட்டங்களைக் கொண்டிருந்தது அவர்களுக்கு வசதியாயிற்று. பெற்றோரின் அனுமதி கிடைக்காதவர்கள் இந்த சட்ட முரண்பாட்டை மீற , ஸ்காட்லாந்தின் ‘கிரெட்னா க்ரீனில்’ அடைக்கலம் தேடி திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். இங்கிலாந்து காதலர்களை இணைத்த ஊர் என்பதால் மிகவும் பிரபலமானதாக இருக்கிறது.

கிரெட்னா க்ரீனில் உள்ள புகழ்பெற்ற ‘பிளாக்ஸ்மித் ஷாப்’ ரகசிய திருமணங்களின் மையப் புள்ளியாக விளங்கியது என்ற கதை உலவுகிறது. அங்கிருந்த கொல்லன், மதகுருவாக, ஸ்காட்டிஷ் சட்டத்தின் கீழ் திருமணங்களை நடத்தி உலோகத்தை மட்டுமல்ல, சமூகக் கட்டுப்பாடுகளை மீறிய அன்பின் பிணைப்புகளையும் உருவாக்கியுள்ளார். இன்றும் உருவாக்குகிறார்.

பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. இருப்பினும் ‘கிரெட்னா கிரீன்’ ஒரு தனித்துவமான, மறக்கமுடியாத திருமண அனுபவத்தை விரும்பும் காதலர்களுக்கான முதன்மையான இடமாகத் தொடர்கிறது. நாங்கள் சென்றிருந்த பொழுது பல காதலர்கள் தங்கள் திருமண வைபவத்தைத் தனியாகவும் குடும்பங்களுடனும் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். காதலுக்கு வயது ஏது😍

கிரெட்னா க்ரீனுக்கு ஓடிப்போகும் பாரம்பரியம் எப்போதும் போல் வசீகரமாக உள்ளது. உலகெங்கிலும் உள்ள தம்பதிகள் அதன் காதல் வசீகரத்திற்கு ஈர்க்கப்படுகிறார்கள் என்பதற்கு இன்றும் அங்கு நடைபெறும் திருமணங்களே சாட்சி. இருவரின் அந்தரங்க விழாவாக இருந்தாலும் சரி அல்லது குடும்பம் மற்றும் நண்பர்களுடனான பிரமாண்டமான கொண்டாட்டமாக இருந்தாலும் சரி, கிரெட்னா கிரீன் ஒவ்வொரு ஜோடியின் விருப்பத்திற்கும் ஏற்றவாறு திருமண ‘பேக்கேஜ்களை’ வழங்குகிறது. பாரம்பரியமான ஸ்காட்டிஷ் திருமணங்கள் முதல் நவீன கொண்டாட்டங்கள் வரை அங்கு நடத்தப்படுகிறது. எல்லாம் காசு…பணம்…துட்டு…மணி…மணி. காதலுக்கு அத்தனை ஈர்ப்பு!

கண்டிப்பான சட்டங்கள், சமூக விதிமுறைகளைக் காதலர்கள் மீறிய வரலாற்றுச் சான்றாக ‘கிரெட்னா கிரீன்’ இன்றளவும் பார்வையாளர்களைக் கவருகிறது. காதலைப் ‘பூட்டி பூட்டி’ வைத்து விட்டுச் சென்றிருந்தார்கள்! வேடிக்கை மனிதர்கள்!

இதைத்தவிர, அதன் சுற்றுச்சூழலின் அழகு வசீகரிக்கிறது. அழகிய வினோதமான குடிசை வீடுகள் உள்ள கிராமத்துத் தெருக்கள், 12 ஆம் நூற்றாண்டின் பழைய பாரிஷ் தேவாலயத்தின் இடிபாடுகளை அழகாகப் பராமரித்து வருகிறார்கள்.

ஆங்கில இலக்கியத்திலும் ‘கிரெட்னா கிரீன்’ இடம் பிடித்துள்ளது.பிரபல ஆங்கில நாவலாசிரியர் ஜேன் ஆஸ்டனின் “ப்ரைட் அண்ட் ப்ரெஜுடிஸ்” நாவலில் வரும் லிடியா பென்னட் கதாபாத்திரம் விக்ஹாமுடன் ஓடிப்போய் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொள்வது இங்கு தான். ஜேன் ஆஸ்டன் நாவலில் வரும் காதல் வசனங்களை அங்கே மேற்கோள் காட்டியிருந்தது சிறப்பு.

நாங்களும் ‘காதல் கோட்டை’யில் விதவிதமாக படங்களை எடுத்துக் கொண்டோம்😇 ‘Courtship Maze’ என்ற இடத்தில் உள்ளே சென்று சிறிது நேரம் தொலைந்து போகலாம். தொலைந்தும் போனோம். ஆசை தீர ஸ்காட்லாந்தைப் பார்த்து விட்டோம்.

பை,பை ஸ்காட்லாண்ட்😍

இரண்டு மைல் தொலைவில் இங்கிலாந்து எல்லைக்குள் நுழைந்து விட்டோம். இருவழிச்சாலையின் இருபுறமும் மரங்கள் வேலிகளாக நிற்க, மேடும் பள்ளமுமாய் நீண்ட சாலைகள்! திடீர் திடீரென்று மஞ்சள் நிறப்பூக்களுடன் மலைப்பகுதிகள், பண்ணைகள் காட்சி தந்தது அழகு! திருத்தமாக வெட்டிய நெருக்கமான செடிகளைக் கொண்டு வேலிகள் அமைத்திருந்தார்கள். சமவெளியிலும் மலையிலுமாய் தொடர்ந்து சென்று கொண்டிருந்தோம். தொலைவில் பச்சை ஆடை உடுத்திய மலைராணி! வேல்ஸ்ன் அழகு ராணி! 45 நிமிடத்தில் ஆவலுடன் காத்திருந்த ஊருக்குள் நுழைந்து விட்டோம். ஈஷ்வரின் கனவுகளில் மற்றொன்றும் நனவாகும் நேரம் வந்துவிட்டது. ஆம்! அவருடைய ஆஸ்தான ஆங்கிலக்கவிஞர் ‘வேர்ட்ஸ்வொர்த்’ பிறந்து வளர்ந்து நடந்து வாழ்ந்த இடங்களைப் பார்க்க வேண்டுமென்பது நீண்ட நாள் கனவு. வண்டியை ஓரிடத்தில் நிறுத்தி விட்டு பரவசமாக நடந்து சென்ற ஈஷ்வருடன் நானும் சேர்ந்து கொண்டேன்.

இங்கிலாந்தின் ‘கம்ப்ரியா’வில் உள்ள ‘காக்கர்மவுத்’ என்ற அழகான நகரத்தில் அமைந்துள்ள ‘வேர்ட்ஸ்வொர்த் ஹவுஸ் & கார்டன்’, ஆங்கில இலக்கிய உலகின் சிறந்த கவிஞர்களில் ஒருவரான வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்திற்கு அஞ்சலி செலுத்துகிறது. வேர்ட்ஸ்வொர்த் பிறந்து தனது ஆரம்பக் காலங்களை கழித்த இந்த வரலாற்று இல்லம், 18ம் நூற்றாண்டுக்கே அழைத்துச் சென்று புகழ்பெற்ற காதல் கவிஞரின் வாழ்க்கையை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. இது ஒரு அருங்காட்சியகம் மட்டுமல்ல. வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்தின் உண்மையான பிறந்த இடமும் வளர்ந்த வீடும் கூட. அதன் பிரம்மாண்டம் அவருடைய செல்வச்சிறப்பையும் பறைசாற்றுகிறது.

வேர்ட்ஸ்வொர்த்தின் இயற்கை மீதான கவிதைகள் உலகம் முழுவதும் உள்ள வாசகர்களைக் கவர்ந்துள்ளது. காக்கர்மவுத் மற்றும் அதைச் சுற்றியுள்ள நிலப்பரப்புகள் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்தின் கவிதைக்கு முடிவில்லாத உத்வேகத்தை அளித்துள்ளன. இயற்கையுடனே வாழ்ந்திருக்கிறார் மனிதர் என்பதை அங்கு நின்றிருந்த ஒவ்வொரு நொடியிலும் உணர்ந்தோம். ‘வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் தவிர, அவரது சகோதரி ‘டோரதி’யும் ஒரு திறமையான எழுத்தாளரும் நாட்குறிப்பாளரும் ஆவார். வேர்ட்ஸ்வொர்த் ஹவுஸில் டோரதியின் ‘கிராஸ்மியர் ஜர்னல்’ உள்ளது. இது ‘லேக் டிஸ்ட்ரிக்ட்’ல் அவர்களின் தினசரி வாழ்க்கையை, உடன்பிறப்புகளின் நெருங்கிய உறவை விவரிக்கிறது. ‘வேர்ட்ஸ்வொர்த் ஹவுஸ்’ சுற்றிலும் சுவர் எழுப்பிய அழகிய தோட்டத்தால் சூழப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் தோட்டத்தின் பாதைகளின் தளம் வழியாக அலைந்து திரிந்து, மலர்க்காட்சிகள், வேர்ட்ஸ்வொர்த் குடும்பத்திற்கு நன்கு தெரிந்த மருத்துவ மூலிகைகள் மற்றும் தாவரங்களைக் கண்டறியலாம். விளக்கமாக எழுதி வைத்திருக்கிறார்கள். பார்வையாளர்களுக்கு வேண்டிய தகவல்களை மிக அழகாகத் தொகுத்து வழங்குகிறார்கள்! நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமும் கூட!

அங்கிருந்து ஒரு மணிநேரத்தில் ‘லேக் டிஸ்ட்ரிக்ட்’ வந்து சேர்ந்தோம். இங்கிலாந்தின் வடமேற்கு மூலையில் நிகரற்ற அழகுடன் இருக்கும் ஏரி மாவட்டம். அதன் பசுமையான மலைகள், அமைதியான ஏரிகள் மற்றும் அழகிய பள்ளத்தாக்குகள், வளமான, கலாச்சார பாரம்பரிய நிலப்பரப்புகள் பார்வையாளர்களைக் கவர்கிறது. 2017 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக நியமிக்கப்பட்ட ‘லேக் டிஸ்ட்ரிக்ட்’ அதன் அற்புதமான இயற்கை அழகு மற்றும் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளுக்குப் புகழ்பெற்றது. இப்பகுதியின் மையத்தில் வின்டர்மியர், டெர்வென்ட்வாட்டர் மற்றும் உல்ஸ்வாட்டர் போன்ற நீர்நிலைகள் உட்பட அதன் பெயரிடப்பட்ட ஏரிகள் பலவும் உள்ளன. இங்கிலாந்தின் மிக உயரமான சிகரமான ‘ஸ்காஃபெல் பைக்’ உட்பட ஏரி மாவட்டத்தின் மலைகளின் கரடுமுரடான சிகரங்கள் ஏரிகளுக்கு மேலே கம்பீரமாக உயர்ந்து நிற்கின்றன. மலையேறுபவர்களுக்கும் நடைப்பயணம் செல்பவர்களுக்கும் இயற்கையை அனுபவிப்பதற்குப் பல வாய்ப்புகளை வழங்குகிறது.

நீண்ட காலமாக எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் கலைஞர்களுக்கு உத்வேகமாக இருந்து வருகிறது ஏரி மாவட்டம். வில்லியம் வேர்ட்ஸ்வொர்த், சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ் மற்றும் பீட்ரிக்ஸ் பாட்டர் உள்ளிட்ட காதல் கவிஞர்கள், இப்பகுதியின் இயற்கை அழகில் மயங்கி அதன் நிலப்பரப்புகளையும் புனைவுகளையும் தங்கள் இலக்கியம் மற்றும் கலைப் படைப்புகளில் இழைத்துள்ளனர். லேக் மாவட்டத்திற்கு வருபவர்கள், வேர்ட்ஸ்வொர்த்தின் ‘டவ் காட்டேஜ்’ முதல் பீட்ரிக்ஸ் பாட்டரின் ‘ஹில் டாப் ஃபார்ம்’ வரையிலான இலக்கியப் பிரமுகர்களின் வீடுகளைக் கண்டு ரசிக்கலாம். மிக அழகான அமைதியான கிராமம்! சுத்தமாக இருந்தது!

‘டவ் காட்டேஜ்’ முன் நின்ற பொழுது ஈஷ்வரின் கண்களில் ஆனந்தக்கண்ணீர்! சுவற்றின் ஒவ்வொரு கற்களையும் தொட்டு வீட்டில் ஒவ்வொரு இடத்திலும் நின்று தனது ஆதர்ச கவிஞரை முழுமையாக தன்னுள் உணர்ந்து கொண்டிருந்தார். அங்கு வந்திருந்த பார்வையாளர்களும் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். அவர் அமர்ந்து எழுதிய மேஜை, உண்டு உறங்கிய இடம் என்று வீட்டைச் சுற்றிக் காண்பித்து ஒளிப்படம் வாயிலாக கவிஞரின் வாழ்க்கையை விளக்கியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அந்தக்காலத்தில் கழிவறை என்பது வீட்டில் இல்லை. ஆற்றுப்பக்கம் தான் ஒதுங்கியிருக்கிறார்கள்! வீட்டைச் சுற்றிலும் அழகிய பசுந்தோட்டம்! ஆங்காங்கே மேற்கோள்கள் எழுதப்பட்ட பலகைகள்!

I wandered lonely as a cloud
That floats on high o’er vales and hills,
When all at once I saw a crowd,
A host, of golden daffodils;
Beside the lake, beneath the trees,
Fluttering and dancing in the breeze.

-‘I wandered lonely as a cloud’

ஆசை தீர வீட்டைச்சுற்றி வந்தோம். அருகிலிருந்த ஏரிக்குச் சென்று படகில் பயணித்தோம். அங்கிருந்து தெரிந்த மலைகள், இயற்கைக்காட்சிகள் மனதை கொள்ளை கொள்ள, கவிஞரின் வரிகளை ஈஷ்வர் நினைவூட்ட,

And the round ocean and the living air,
And the blue sky, and in the mind of man;
A motion and a spirit, that impels
All thinking things, all objects of all thought,
And rolls through all things. Therefore am I still
A lover of the meadows and the woods,
And mountains; and of all that we behold
From this green earth; of all the mighty world
Of eye, and ear,—both what they half create,
And what perceive; well pleased to recognise
In nature and the language of the sense,
The anchor of my purest thoughts, the nurse,
The guide, the guardian of my heart, and soul
Of all my moral being.

-Tintern Abbey

அந்த அற்புத மனிதரின் இயற்கையுடனான இனிமையான வாழ்க்கை கண்முன்னே வந்து சென்றது, கவிதைகளாக! வாழ்க்கையின் மறக்க முடியாத நாள். அங்கேயே ஓரிரவு தங்கி விடலாமா என்று கூட பயணத்திட்டத்தை மாற்ற நினைத்தோம்.முடிந்தால், மீண்டும் வர வேண்டிய இடம் என்று தோன்றியதால் அங்கிருந்து செல்ல மனமில்லாமல் அழகிய வெல்ஷ் மலைகளைக் கடந்தவாறே பயணத்தைத் தொடர்ந்தோம். லிவர்பூலில் இரவு தங்குவதற்கு முன் ‘சாய் சுரபி’ என்ற இந்தியன் உணவகத்தில் சுவையான உணவை உண்டோம். அப்பளத்தை ‘appetizer’ ஆக நொறுக்குகிறார்கள். என்னவோ போடா மாதவா! அங்கே தான் ‘மட்டன் கராஹி’ முதன்முதலாகச் சுவைத்தேன். அருமையாக இருந்தது.

மனமும் வயிறும் நிறைய அற்புதமான நாள் இனிதே நிறைவடைந்தது. நாளைய நீண்ட பயணத்தை எண்ணி ஆவலுடன் உறங்கச் சென்றோம்.

Friday, March 29, 2024

Tell me that you love me


பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு கொரியன் நாடகத்தொடர் பார்த்து முடித்தேன். துவக்கப் பாடலே கேட்பதற்கு அத்தனை சுகமாக இருக்க, காட்சிகளும் கவிதையாக இருக்கவே எப்படியும் இந்தத் தொடர் பிடித்து விடும் என்ற நம்பிக்கையும் பிறந்தது.

பொறுமை அதிகம் இருப்பவர்களுக்குத் தான் கொரியன் தொடர்களைப் பார்க்க முடியும். நடுநடுவே நல்ல தூக்கமும் வரும் என்பதால் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் இத்தொடர்களைப் பார்க்க முயற்சிக்கலாம்😂 மொழி புரியாததால் சப்டைட்டிலை படித்துப் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் வேலைகளை முடித்து விட்டுப் பார்த்தால் சுகம்😎 

என்ன அழகானஉரையாடல்கள்! நடுநடுவே வரும் பாடல்கள்! கதாநாயகி அழகி. அவர் அணிந்து வரும் ஒவ்வொரு உடையும் கண்களை உறுத்தாமல் 'சிக்'கென்று கவருகிறது. கவிதைகளாக ரசித்து ரசித்துக் காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். ஒளிப்பதிவில் இவர்கள் கரைகண்டவர்கள் போல! ஒவ்வொரு காட்சியையும் பார்த்துப் பார்த்து எடுத்திருக்கிறார்கள்!

“I always thought I was the one who should make an effort to live in harmony with others. Because in this world, there are a lot more people who can hear than those who can’t. But out of all those people, someone came to me and said hi first.” – Cha Jinwoo

கதாநாயகன், பேசாமலே பேசும் கதாபாத்திரம். அனாயாச நடிப்பால் அவரும் கவருகிறார். தொடரில் வரும் வீடுகளும் அத்தனை அருமையாக! ஒரு தொடர் முழுவதிலும் எந்தவித எதிர்மறை எண்ணங்கள் இல்லாமல் எடுக்க முடியும் என்று ஒவ்வொரு தொடரிலும் நிரூபிக்கும் இந்த கே-டிராமா இயக்குநர்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது. தமிழ் அழுவாச்சி சீரியல் இயக்குநர்களுக்கு என்று இந்த ஞானம் பிறக்குமோ அன்று தமிழகம் கையேந்தி காசு வாங்கி ஒட்டுப் போடாது.

நடுநடுவே வரும் கிளைக்கதைகளைக் கூட அருமையாக கோர்த்திருக்கிறார்கள். கதாநாயகி, நாயகனின் குழந்தைப்பருவம், குடும்பங்கள் இணையும் காட்சிகள், முக்கோண காதல், நண்பர்கள்... சொல்லிக்கொண்டே போகலாம்.

தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் காது கேளாத கதாநாயகன் வாழ்வில் வசந்தமாக வரும் கதாநாயகி. அவனுக்காக, அவளையும் அறியாமல் அத்தனை மெனக்கெடுகிறாள். உருகி உருகி காதலிக்கும் பொழுது காதலனின் இளவயது காதலியின் வருகை அவளுடைய காதலை ஆட்டம் காண வைக்கிறது. எத்தனை சமாதானம் செய்தாலும் செய்து கொண்டாலும் அவளால் முன்பு போல் அவனை காதலிக்க முடியாமல் ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து விடுகிறார்கள். காலம் அவர்களைச் சேர்க்கிறதா? சேர்கிறார்களா? இல்லை ஒருவரின் நினைவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்களா என்பது தான் கதை. 

கல்லூரி ஆசிரியர் என்பதால் மாணவர்கள் வாழ்க்கையையும் அழகாக கதையில் கோர்த்திருக்கிறார்கள். என்ன தான் இத்தனை மென்மையாக ஆண் கதாபாத்திரங்கள் இருந்தாலும் உண்மையில் பெண்களை அடக்கியாள நினைக்கும் மனப்பாங்கு கொண்டவர்கள் தான் கொரியன் ஆண்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பிரபலமான 'ஜெஜூ' தீவில் தொடங்கும் சந்திப்பு சியோலில் தொடர்கிறது. தொடர் முழுவதும் பயணிக்கும் இசை மென்மையோ மென்மை.

என்ன தான் முழுமையாக காதலிக்கிறேன் என்று 'ஜின் வூ' கெஞ்சி கதறினாலும் அவனிடத்திலிருந்து 'மோயூன்' விலகும் பொழுது பார்ப்பவர்களுக்கும் கஷ்டமாகத் தான் இருக்கும். இனி இருவரும் விலகி இருப்பதே நல்லது என்று ஜின் வூ சொல்லும் காட்சியும் அழுகையுடன் பிரிந்து செல்வதும் உண்மையான காதலின் வலி பிரிவதில் தான் என்பதை மிக அழகாக காட்சிப்படுத்தியிருந்தார்கள். கடைசிக்காட்சியிலும் மீண்டும் அதே இடம்!

“Can the fact that we’re so different can be the reason? I mean, no two people in the world are completely the same.”

– Jung Moeun

'பரபர'வென்று தொடர்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை. கதைக்கேற்றவாறு காட்சிகளும் மெதுவாக ஆனால் பார்க்கும்படி ரசிக்க வைத்திருக்கிறார்கள். காதல் என்ற ஒரு உணர்வை எப்படியெல்லாம் அழகாகக் கூறமுடியுமா அதில் பிஹெச்டி வாங்கிவிட்டிருக்கிறார்கள் கொரியன் இயக்குநர்கள். சபாஷ்! கதாபாத்திரங்கள் கத்திப் பேசி நடித்துப் பார்த்த நமக்கு தொடர் முழுவதும் சைகை மொழியிலேயே பேசும் கதாபாத்திரம் வந்தால் எப்படி இருக்கும்?

தொடர் முடியும் பொழுது நானே சில சொற்களுக்கு சைகை மொழியில் பேச கற்றுக்கொண்டேன் என்றால் பாருங்கள்! 16 பாகங்கள்! இந்தப் பெண்ணைப் பெற்ற கொரியன் பெற்றோர்கள் இந்திய பெற்றோர்களைப் போலவே இருப்பதும் பேசுவதும் கூட தொடர்களைப் பார்க்கத் தூண்டுகிறது என்று நினைக்கிறேன்.

வீட்டில் தலைக்கு மேல் வேலைகள் இருக்கும் பொழுது தான் இந்த மாதிரி தொடர்கள் கண்ணில் பட்டுத் தொலைக்கும். 'கிடுகிடு'வென்று வேலையை முடிப்பதற்கு முன், நடுவில், பின் என்று பார்ப்பதும் சுகம் தான்😋

“Only when you take a pause and gaze there’s a voice you can hear.”
– Cha Jinwoo😍😍😍

Thursday, March 28, 2024

அடடா மழைடா ஐஸ் மழைடா!


எப்படியோ இந்த வருட பனிமழையிலிருந்து தப்பித்து விட்டோம் என்று நினைத்திருந்தேன். இந்தியாவிலிருந்து மார்ச் இரண்டாம் வாரம் தான் ஊருக்குத் திரும்பிவந்தோம். பளீரென்று நீல நிற வானம் வரவேற்க, பனிக்கால ஜாக்கெட் கூட தேவையில்லாமல் இருந்தது நாங்கள் நியூயார்க்கில் வந்திறங்கிய பொழுது. பரவாயில்லையே! இனி மழைக்காலம் தான் என்று சந்தோசப்பட்டுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். அடுத்த நாள் குளிர ஆரம்பித்து அதற்கு மறுநாள் கண்விழித்துப் பார்க்கையில் எங்கே இருக்கிறோம் என்ற குழப்பத்தில், என்னடா, மழை! அதுவும்... 'அடடா மழைடா ஐஸ் மழைடா'! என்று ஆச்சரியமாகி விட்டது. ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 'ஊமைக்கோட்டான்' போல இருந்து விட்டு மழைக்காலம் தொடங்கிய பிறகு இப்படி வந்து கொட்டிக் கொண்டிருக்கிறதே என்று கவலையாகிவிட்டது எனக்கு.

'சொட்சொட்சொட்சொட்' என்று அன்று முழுவதும் ஐஸ் தரையில் விழ, மரங்கள், செடி, கொடிகள் எல்லாம் முழுவதுமாக ஐஸால் மூடப்பட்டு இரவு பனிமழையும் சேர்ந்து கொண்டு, தட்பவெப்பம் மைனஸ் நோக்கிச் செல்ல, நல்லவேளை! காலையில் அதிரடியாக எழுந்து வெளியே செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்ற நினைவே ஆசுவாசமாக இருந்தது.

மறுநாள் காலையில் நீலவானம் பஞ்சுப்பொதி மேகங்களுடன் வலம் வர, நேற்று பெய்த மழைக்கும் இன்றிருக்கும் வானத்திற்கும் ஒரு சம்பந்தமும் இல்லாதது போல இயற்கை தான் எத்தனை மகத்தானது! மரங்களில் படிந்த ஐஸ்மழை இப்பொழுது 'குச்சி குச்சி ராக்கம்மா'வாக கிறிஸ்துமஸ் அலங்கார வெள்ளை விளக்குகளாக ஜொலித்துக் கொண்டிருந்தது கொள்ளை அழகு. பல வருடங்களுக்குப் பிறகு இத்தனை அழகான மழையும் பனியும் செய்த மாயம்!

"வீட்டில் உட்கார்ந்து வேடிக்கைப் பார்க்கக் கூடாது. வழக்கமாகச் செல்லும் பூங்காவிற்குச் சென்று வருவோம்" என்று ஈஷ்வர் அழைக்க, கிளம்பினால்...

வழியெங்கும் வெண்ணிற ஆடை உடுத்தி கண்களைக் கூசச் செய்தாள் இயற்கை அன்னை! பூங்காவில் பத்து வண்டிகளாவது இருந்திருக்கும்! குழந்தைகளை அழைத்துக் கொண்டு குளத்தில் சுற்றும் வாத்துக்களைப்

பார்க்க வந்திருந்த குடும்பம், பெண் நண்பருடன் வந்திருந்தவர், மனைவியுடன் என்று சிலரை கடந்து சென்றோம். 'கனடா கீஸ்' என்றழைக்கப்படும் வாத்துகளும், 'மல்லார்ட்' வாத்துகளும் கத்திக்கொண்டு குளத்தை வலம் வந்து கொண்டிருந்தன.


 

முடிந்த அளவு படங்களை 'கிளிக்' செய்து கொண்டோம். ஓரிரு நாட்களில் கரைந்து விடும் அழகு தான். ஆனால் ஊரே இயற்கை சாண்ட்லியர் விளக்கில் அல்லவா ஜொலித்துக் கொண்டிருந்தது!




காணொளிக்கு இங்கே சொடுக்கவும் 👇

  அடடா மழைடா ஐஸ் மழைடா!


Tuesday, March 19, 2024

அமேசிங் பிரிட்டன் -6- ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 314ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் நான்காவது பாகம். ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்

லண்டனில் ஆரம்பித்த எங்களது பயணம் இங்கிலாந்தைக் கடந்து ஸ்காட்லாந்தின் கிழக்குப் பகுதியை வலம் வந்து ஐந்தாவது நாளில் வடக்கே ‘இன்வெர்னஸ்’லிருந்து தெற்கு நோக்கி ‘கிளாஸ்கோ’ நகருக்குச் செல்ல, ஆவலுடன் துவங்கியது அன்றைய விடியல். நாங்கள் தங்கியிருந்த விடுதியில் விடுமுறையைக் கொண்டாட வந்திருந்த பலரும் இந்தியர்களாகத் தெரிந்தார்கள். சீனர்களும் இந்தியர்களும் தான் அதிகளவில் விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்வது போல எனக்குத் தான் தோன்றுகிறதோ?அமெரிக்காவைப் போல அதிகமான சீனர்களை இங்குக் காணவில்லை. எடின்புரஃஹ் நகரில் தாய்லாந்து மக்களின் உணவகங்கள் தான் அதிகமாகத் தென்பட்டது. இப்படி பொதுவான விஷயங்களைப் பேசிக்கொண்டே அருமையான காலை உணவை உண்டு முடித்தோம். அங்கிருந்து அரைமணி நேரத்தொலைவில் இருக்கும் ‘லாக் நெஸ்’ (‘Loch Ness’)க்குப் புறப்பட்டோம். அங்கு தான் ‘Loch Monster’ மறைந்திருக்கிறது என்ற மர்மம் உலவுகிறது!

செல்லும் வழியெங்கும் துளிர் விடும் மரங்கள் அணிவகுத்து நிற்க, போக்குவரத்து நெரிசல் இல்லாத பயணம் அழகு. உள்ளூர் மக்கள் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்கள்! ஏற்ற இறக்கத்துடன் செல்லும் மலைவழிப்பயணத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் பலரும் 50 வயதிற்கு மேல் இருப்பார்கள்! உடலை நன்றாகப் பேணியிருந்தால் மட்டுமே இத்தகைய கடினமான பயணங்களை எளிதாக அவர்களால் செய்ய முடியும். ஏக்கப் பெருமூச்சுடன் அவர்களைக் கடந்தோம்! சிறிது நேரத்தில் நாங்கள் ஆவலுடன் காத்திருந்த ‘லாக் நெஸ்’ வந்தடைந்தோம். ‘loch’ என்பதை ஸ்காட்டிஷ் மொழியில் உச்சரிப்பதைக் கேட்கப் பயிற்சி செய்ய வேண்டும்😕

இருபுறமும் மலைகள் சூழ்ந்திருக்க, இன்வெர்னஸ்ன் தென்மேற்கே 37 கிலோமீட்டருக்கு விரிந்திருக்கும் அழகான நன்னீர் ஏரி ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸின் வசீகரமான ஏரியும் கூட. ‘நெஸ்’ ஆற்றின் பெயரைச் சுமந்த ‘Loch’ பார்வையாளர்களைக் கவருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வண்டியை நிறுத்தி சிறு மலை மீதிருந்து அழகான, அமைதியான ஏரியைப் பார்க்க கொள்ளை அழகு! எவ்வளவு நேரம் அங்கு அமர்ந்திருந்தோம் என்று தெரியவில்லை. அங்குச் சுற்றிக்கொண்டிருந்த பறவைகளைப் படம் பிடித்துக் கொண்டு மனமேயில்லாமல் அங்கிருந்து கிளம்பினோம். எங்கும் இயற்கை. எதிலும் இயற்கை என்றிருந்தால் மிகவும் புகழ் பெற்ற ஸ்காட்டிஷ் கவிஞர் ‘ராபர்ட் பர்ன்ஸ்’ இயற்கையைப் பற்றி எழுதாமல் இருந்திருப்பாரா? ஆங்கிலக்கவிஞர்கள் அதுவும் ஈஷ்வருக்குப் பிடித்தவர்கள் என்றால் நேரம் செல்வது தெரியாமல் அவர்களுடைய கவிதைகளைப் பற்றிப் பேசிக்கொண்டே செல்வது எங்கள் வாடிக்கை. ஈஷ்வர் கல்லூரி விரிவுரையாளராகி விடுவார். நான் மாணவியாகி விடுவேன்😎

அங்கிருந்து சிறிது தொலைவில் ‘The South Loch Ness Trail’ என்ற பிரபலமான இடத்தை வந்தடைந்தோம். வழியெங்கும் இயற்கைக்காட்சிகள் கண்களை நிறைக்க, காபிக்கடையைப் பார்த்ததும் சிறிது இளைப்பாறல். எதிரே மலைகள் சூழ ‘லாக் நெஸ்’. சிறிய காபிக்கடையில் பணியாற்றிக்கொண்டிருந்த பெண்கள் சிநேகப்புன்னகையுடன் பம்பரமாய்ச் சுழன்று அனைவரையும் கவனித்துக் கொண்டிருந்தார்கள். சைக்கிளில் வந்திருந்த மகளிர் கூட்டம் சிரித்துப் பேசிக்கொண்டே சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். நாங்களும் எங்களுக்குப் பிடித்த உணவுகளுக்கு ஆர்டர் கொடுத்து விட்டு ரம்மியமான சூழலை அனுபவித்துக் கொண்டிருந்தோம். உள்ளூர் மக்கள் தங்களுடைய சைக்கிள் பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.

அமெரிக்காவில் ‘Appalachian Trail’ என்ற 2,190 மைல்களுக்கு நீண்ட மலைப்பயணம் வடகிழக்கே ‘மெயின்’ மாநிலத்தில் ஆரம்பித்து 14 மாநிலங்கள் வழியாக தெற்கே ‘ஜார்ஜியா’வில் முடிவடையும். என் நண்பர்கள் பலரும் அவர்களுடைய உறவினர்களும் வருடத்தில் சில நாட்கள் சில பகுதிகளுக்குச் சென்று மலையேறி வருவார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் எப்படியாவது இந்த நீண்ட கடினமான மலைப்பயணத்தை முடித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அதைப் போலவே இங்குள்ள உள்ளூர் மக்களும் ‘ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்’ல் சைக்கிளில் பயணிக்கிறார்கள் என்று அறிந்து கொண்டேன். சாகச மனிதர்கள்!

அமெரிக்காவிலிருந்து வந்திருந்த குழு ஒன்று லண்டனிலிருந்து வண்டி ஒன்றை வாடகைக்கு எடுத்து சுற்றுலா வந்திருப்பதாகக் கூறினார்கள். இதுவும் நல்ல யோசனை தான். வேன் நிறைய மக்கள். செலவும் கொஞ்சம் குறைவாக இருக்கும். ஆனால் தனியாக வண்டி ஒட்டி வருவதில் கிடைக்கும் சில பல வசதிகள் கூட்டமாக வேனில் வரும் பொழுது கிடைக்காது. அவர்களுடன் சேர்ந்து பேசிக்கொண்டே ‘Fall of Foyers’ என்ற அருவியைக் காண விரைந்தோம். அவர்கள் பார்க்கத்தான் வயதானவர்களாகத் தெரிந்தார்கள். வேகமாக நடக்க ஆரம்பிக்க, நான் மூச்சிரைக்க, ஐயோடா என்றிருந்தது. சுற்றுலா நிறுவனத்தினருடன் வந்தால் இப்படித்தான் குறிப்பிட்ட நேரத்திற்குள் திரும்ப வேண்டும் என்று கெடு வைப்பார்கள். நல்ல வேளை! எனக்கு அப்படியான நெருக்கடி ஏதுமில்லை என்று நிம்மதியாக இருந்தது.

140அடி ஆழ அருவியைக் காண கீழிறங்க, உயர்ந்த மரங்களூடே பயணம். வேர்களும் கற்களும் பரவியிருந்த இடத்தில் கவனமாகச் செல்ல வேண்டியிருந்தது. வேகமாக இறங்கும் பொழுதே ஏறும் பொழுது கடினமாக இருக்கப் போகிறது என்ற கவலை. அருவி தரும் உற்சாகம் மனதையும் தொற்றிக்கொள்ள விரைந்து சென்று பார்த்தால், தண்ணீர் அதிகமில்லாத அருவி கொஞ்சம் ஏமாற்றத்தைத் தந்தது. அருகில் கூட செல்ல முடியாது. இதற்கா இவ்வளவு மெனக்கெட்டோம்😌 செங்குத்தான பாதையில் மூச்சிரைக்க மேலேறி வந்த பிறகு தான் அப்பாடா! என்றிருந்தது. அங்கிருந்து கிளம்பி வழியில் பல இடங்களில் வண்டியை நிறுத்தி நாங்கள் இருவர் மட்டும் சிறிது தூரம் நடந்து சென்று வந்தோம். மனிதர்கள் நடமாட்டம் குறைந்த இடங்களில் அமைதி தவழ்கிறது.
ஸ்காட்லாந்தின் வடக்கில் மட்டுமல்ல மேற்குப்பகுதியிலும் தொடருகிறது ‘ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்’. இருபுறமும் மலைகள். நடுவே சீரான சாலையில் வண்டியில் செல்வதே அத்தனை சுகம்! ஆங்காங்கே பயணிகள் நின்று கொண்டு காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்தார்கள். நாங்களும் சேர்ந்து கொண்டோம். எதிரில் தெரிந்த மலையில் சிறிது தூரம் ஏறிச்செல்ல, பானோரோமிக் காட்சியின் அழகு, சொல்ல வார்த்தைகளே இல்லை. ஸ்காட்லாந்தின் மற்றுமொரு அழகு ‘ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்’ என்பதை அந்தச் சாலைகளில் பயணித்த ஒவ்வொரு நொடியும் உணர்ந்தோம்.

மலைகள், நீர்நிலைகள் சூழ்ந்த இடங்கள் அமெரிக்காவின் ‘மொண்டானா’ மாநிலத்தில் நாங்கள் பயணித்த இடங்களை நினைவூட்டியது. நியூயார்க்கின் ‘Lake Placid’ செல்லும் வழியைப் போலவே சாலை நெடுக ஒருபுறம் மலைகள் அரணாக, மறுபுறம் ஏரியும் மலைகளும் துணைக்கு வந்தது பேரழகு. கருமேகங்களும் மூடுபனியும் இயற்கையை இன்னும் செழுமையாக்க, பாவம் ஈஷ்வர்! முழுமையாக வேடிக்கைப் பார்க்க முடியாமல் ஓட்டுவதில் கவனமாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தம். அவருக்கும் சேர்த்து நானே லைவ் கமெண்ட்ரி சொல்லிக் கொண்டு வந்தேன்😎 வழியில் செம்மறியாடுகளும் மாடுகளும் ‘ஹாயாக’ மேய்ந்து கொண்டிருந்த பண்ணைகள். நின்று படங்களை எடுத்துக் கொண்டோம். ‘கிளாஸ்கோ’ செல்லும் பயணம் இத்தனை சுகமான பயணமாக இருக்கும் என்று நினைத்துப் பார்த்திருக்கவில்லை.

அடுத்து நாங்கள் நிறுத்திய இடம் ‘World War II Commando Memorial’. இரண்டாம் உலகப்போரின் பொழுது அந்தப் பகுதிகளில் தங்கி பயிற்சி அளித்த நேச நாட்டுப் படைவீரர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அருகே போரில் இறந்த வீரர்களின் நினைவிடமும் இருந்தது. அங்கிருந்து பிரிட்டனின் உயரமான மலையான ‘Ben Nevis’ காட்சி தருகிறது. உச்சியில் பனிக்காலத்தின் அடையாளமாகச் சிறிது பனி. அந்த மலையில் ஏற குறைந்தது ஒன்பது மணிநேரங்கள் ஆகலாம். வேண்டாம். தூரத்திலிருந்து பார்க்க அழகாக இருக்கிறது. என்ன? ஒருகாலத்தில் எரிமலையாக இருந்த மலை. உச்சியில் அதன் அடையாளங்களைக் காண மக்கள் செல்வார்கள் என்று அங்கிருந்த பயணிகள் கூறினார்கள்.
இங்கிலாந்து இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த காலத்தில் நடந்த உலகப்போரில் எண்ணற்ற இந்திய வீரர்கள் பங்கேற்று உயிரை இழந்துள்ளனர். அவர்களைப் பற்றின தகவல்களோ நினைவுச்சின்னங்களோ நம் நாட்டில் இல்லாததை நினைத்து வருத்தமாக இருந்தது. நம்மை ஆண்டவர்களுக்கு நம் உயிரின் மதிப்பு அவ்வளவுதான்! சசிதரூரின் புத்தகம் நினைவிற்கு வந்தது. மீண்டும் விட்ட இடத்திலிருந்து வாசிக்க வேண்டும். ம்ம்ம்ம்ம் ….

நல்ல பசி நேரம். ‘Glencoe’ ஊரை வந்தடைந்திருந்தோம். ஸ்காட்லாந்து மக்களின் புரட்சிப்படை இங்கிலாந்துடன் மோதியதில் பலரும் இங்கு கொல்லப்பட்டிருக்கிறார்கள். வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் ஊர் என்று அறிந்து கொண்டோம். வரலாறு தான் எத்தனை கொடியது! போர்கள் எத்தனை எத்தனை உயிர்களைப் பலிகொண்டுள்ளது! இந்தியாவில் மட்டும் முறையாக ஆவணப்படுத்தியிருந்தால் அத்தனை அத்தனை மனதை உருக்கும் கதைகள் ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்திருக்கும்! இப்படி வரலாறு என்னவென்றே அறியாத தலைமுறை. எது உண்மை எது உருட்டு என்று குழம்பிப் போயிருக்காது!ஹ்ம்ம்ம்….

நிறையவும் யோசித்ததில் பசிக்க ஆரம்பித்து விட்டது. அருகிலிருந்த உணவகத்தில் சென்று ‘சிக்கன் சாண்ட்விச்’ சொல்லிவிட்டுக் காத்திருந்தோம். உணவகத்தின் பெண் உரிமையாளர் எங்களைப் பற்றி விசாரித்து விட்டு அவரே பரிமாறினார். அழகாக அலங்கரிக்கப்பட்ட மேஜைகள். இனி தான் மதிய உணவிற்கு கூட்டம் வரும் போலிருக்கிறது. மணி 12 அடிப்பதற்குள் நாங்கள் சென்று விட்டிருந்தோம். வெளியே சுற்றிப் பார்க்கையில் ‘ஸ்பைஸ் தந்தூரி’ என்று ஒரு உணவகம். அட! இந்த ஊரிலும் ஒரு இந்திய உணவகமா! ஆச்சரியத்துடன் கடந்தோம்.
‘பச்சைப்பசேல்’ மலைகள் தொடர்ந்து வர , ‘க்ளென்க்கோ’ ஊரின் இயற்கைக்காட்சிகளைக் கண்களிலும் காமெராவிலும் படமெடுத்துக் கொண்டே வர, ஆறுகளில் உல்லாசப்படகுகளில் சவாரி செய்து கொண்டிருந்தார்கள் உள்ளூர் மக்கள். பைக்குகளில் செல்பவர்களைக் கண்டவுடன் ஈஷ்வர் கொஞ்சம் பொறாமையுடன் ‘இங்கு பைக்கில் தான் செல்ல வேண்டும்’ என்று ஏக்கப் பெருமூச்சு விட, ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்ன் பிரபலமான ‘தி த்ரீ சிஸ்டர்ஸ்’ மலைகள் இருக்குமிடமும் வந்துசேர்ந்தது. பரந்த இடம். வண்டிகள் நிறுத்த அவ்வளவாக வசதி இல்லை. நாங்களும் சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டுச் சுற்றிப்பார்த்தோம். ‘breathtaking view’ என்பார்களே அப்படி இருந்தது அந்த மூன்று மலைகளும் அதன் அருகே இருந்த நிலப்பரப்பும்! சிறிது தூரம் நடந்து சென்று வந்தோம். அங்கு அந்த மலைகளைப் பற்றின தகவல்களை அழகாக காட்சிப்படுத்தியிருந்தார்கள்.

சாலையோரம் சலசலக்கும் ஓடையில் இளைப்பாறிக்கொண்டிருந்த பைக்கர்களுடன் பேசிக்கொண்டிருந்தார் ஈஷ்வர். வண்டி ஒட்டி வந்த களைப்பு தீர, சிறிது தூரம் நடந்து சென்று வந்தோம். ‘ஜூம் ஜூம் ஜூம்’என்று பைக்கர்கள் ஒருவர் பின் ஒருவராகச் சென்றது அழகு! மீண்டும் தொடர்ந்த எங்கள் பயணத்தில் பார்ப்பதற்கு அழகாக கண்ணுக்குக் குளிர்ச்சியாக ஒரு இடம் தெரிந்தால் போதும். வண்டியை நிறுத்தி இறங்கி சிறிது தூரம் நடந்து என்று இறுதியில் ‘Loch Lomond’ என்ற அழகிய நன்னீர் ஏரியை அடைந்தோம். ஒரு சில வண்டிகளே அங்கு இருந்தது.

அந்த அமைதியில் 'ஜென்' நிலைக்குச் சென்று விட்டார் ஈஷ்வர். நான் மெதுவாக கரையோரம் நடந்தபடி ஏரியைச் சுற்றிக் கொண்டிருந்தேன். நீலவானின் பிரதிபலிப்பில் ஏரி மின்னிக் கொண்டிருந்தது. எதிரே இளைஞ கோட்டை ஒன்றும் தெரிந்தது. பயணி செல்லும் படகுகள் மிதந்தபடி நின்று கொண்டிருந்தது அழகு. இரண்டு ஏரிகள் அவ்வழியே செல்கிறது. உள்ளூர் மக்கள் வந்து செல்லும் அழகிய இடம் என்று அறிந்து கொண்டோம். இப்படி நாடு முழுவதும் ஏரிகள், குளங்கள், ஆறுகள், சுற்றிலும் கடல் என்று இயற்கையோடு ஸ்காட்லாந்து மனதை கொள்ளை கொள்கிறது. இங்கிருந்து சில மணிநேர பயணத்தில் தான் 'கிளாஸ்கோ' நகரம். 



நாங்கள் இரவு தங்க முன்பதிவு செய்திருந்த விடுதி என்று போன இடத்தில், “நீங்கள் டௌன்டவுனில் இருக்கும் விடுதியில் பதிவு செய்திருக்கிறீர்கள். அங்கு தான் செல்ல வேண்டும்” என்று கூற, நல்லவேளையாக அங்கே வண்டி நிறுத்தும் வசதிகள் இருக்கிறது என்று தெரிந்ததும் பெரும் நிம்மதி.

அறைக்குச் சென்றவுடன் பெட்டிகளைப் போட்டுவிட்டு அந்தி சாய்வதற்குள் ஊரைச் சுற்றிப்பார்த்து விட்டு வந்துவிடலாம் என்று கிளம்பினோம். பிரம்மாண்ட கல் கட்டடங்கள்! பழமையான தேவாலயங்கள். மற்ற ஸ்காட்லாந்து ஊர்களைப் போலன்றி மிகப்பெரிய நவநாகரீக நகரமாக இருந்தது. நாங்கள் மட்டுமே வேற்று கிரகத்திலிருந்து வந்தவர்கள் போல துண்டாகத் தெரிந்தோம். மக்கள் சிநேகமாக இருந்தார்கள். வழி கேட்டால் பொறுமையாகப் பதிலளித்தார்கள். பயமில்லாமல் நடமாடலாம் என்று கூறினாலும் மதுரையின் வளர்ப்பும் அமெரிக்காவின் இருப்பும் இருட்டுவதற்குள் அறைக்குத் திரும்பிட வேண்டுமென்று ஆவல் கொண்டது மனம். வரலாற்றைப் பறைசாற்றும் அருங்காட்சியகங்கள் நிறைந்த ஊர். நீண்ட நாளின் களைப்பு ஆட்கொள்ள, விடியலில் ஊரைச் சுற்றிப் பார்க்கலாம் என்று முடிவெடுத்து தூங்கச் சென்றோம்.

இனி ‘ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்’ பற்றி நினைக்கும் பொழுதெல்லாம் ‘ராபர்ட் பர்ன்ஸ்’ எழுதிய கவிதை தான் நினைவிற்கு வரும்.

My Heart’s In The Highlands

Robert Burns

Farewell to the Highlands, farewell to the North,
The birth-place of Valour, the country of Worth;
Wherever I wander, wherever I rove,
The hills of the Highlands for ever I love.

My heart’s in the Highlands, my heart is not here;
My heart’s in the Highlands a-chasing the deer;
A-chasing the wild-deer, and following the roe,
My heart’s in the Highlands wherever I go.

Farewell to the mountains high covered with snow;
Farewell to the straths and green valleys below;
Farewell to the forests and wild-hanging woods;
Farewell to the torrents and loud-pouring floods.

My heart’s in the Highlands, my heart is not here;
My heart’s in the Highlands a-chasing the deer;
A-chasing the wild-deer, and following the roe,
My heart’s in the Highlands wherever I go.


Sunday, March 17, 2024

அமேசிங் பிரிட்டன் -5- இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 313ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் ஐந்தாவது பாகம்.

 இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்




ஒவ்வொரு நாட்டின் தனித்துவமே பயணிகளை அதன் பால் ஈர்க்கிறது. இந்தியாவிற்கு விரும்பி வரும் வெளிநாட்டினர் பலரும், பல்வேறு கலாச்சார பின்னணி கொண்ட மக்கள் வாழும் நாட்டில் அவர்களின் விருந்தோம்பல், கோவில்கள், திருவிழாக்கள், சுற்றுலாத்தலங்கள், வாழ்வியல் முறை, உணவுகளை விரும்புவதாகக் கூறுகின்றனர். அந்த ஈர்ப்பில் மயங்கியவர்கள் மீண்டும் மீண்டும் வந்து செல்கின்றனர். என்னதான் குப்பையும் இரைச்சலும் ஏமாற்றுக்காரர்கள் சிலர் இருந்தாலும் மேற்கூறிய சில முக்கிய அம்சங்களால் கவரப்படுவதை வெளிநாட்டுநண்பர்களும் கூறகேட்டிருக்கிறேன்.

ஸ்காட்லாண்டிற்கு வருகை தரும் மக்களின் அனுபவமும் அவ்வாறே இருக்கிறது. இயற்கை வளம் , வரலாறு, மனிதர்கள், மொழி, இசை, கலாச்சாரம் என்று ஸ்காட்லாண்டில் ஒவ்வொன்றும் பார்வையாளர்களைக் கவர தவறவில்லை. அந்த நாட்டிற்குச் செல்லும் அனைவரும் அதன் பரந்த நிலப்பரப்பு, ஆறுகள், ஏரிகள், வளைந்து செல்லும் சாலைகள், இயற்கைக் காட்சிகள், அழகான கோட்டைகளில் மனம் மயங்குவது உறுதி.

பார்க்கும் இடங்கள் அனைத்துமே அழகான புகைப்படக்காட்சிகளாகக் கண்களை நிறைக்கிறது. அங்குச் சந்தித்த வெளிநாட்டுப் பிரயாணிகளிடம் பேசிய பொழுது கண்கள் விரிய இதனை ஆமோதித்தார்கள்.

‘செயின்ட் ஆண்ட்ரூஸ் – இன்வெர்னஸ்’ செல்லும் சாலைப் பயணம் முழுவதும் இயற்கைக் காட்சிகளுடன் உலா வருகிறது. வழியெங்கும் மூடு பனி மேகங்கள் மலைகளின் பைன் மரங்களைத் தழுவியபடி காட்சிதர, சுகமானபயணம். அவ்வப்பொழுது மழைத்தூறல்.


நாங்கள் சென்ற வழித்தடத்தில் பல அழகிய இடங்கள் இருக்கிறது என்பதை முன்பே அறிந்து வைத்திருந்தோம். ஆவலுடன் முதலில் நாங்கள் சென்ற இடம் ‘Queen’s View’. நெடுஞ்சாலையிலிருந்து உள்ளே செல்லும் வழியெங்கும் வரிசையாக ஓங்கி உயர்ந்து அணிவகுத்து நின்றிருந்த மரங்களின் காட்சியே அத்தனை அழகாக இருந்தது. கலிஃபோர்னியாவில் மவுண்ட்சாஸ்தாவிற்குச் செல்லும் வழியைநினைவூட்டியது. ‘குயின்ஸ்வியூ’ இடத்தைப் பற்றின அறிமுகம் இல்லையென்பதால் எதிர்பார்ப்பும் கூடிக்கொண்டே சென்றது. ஸ்காட்லாந்தின் பெர்த்ஷயர்மலைகளில்அமைந்துள்ள ‘குயின்ஸ்வியூ’, வருகை தரும் அனைவரின் இதயத்தையும் கவரும் ஒரு பொக்கிஷம் என்றே கூறலாம்.

ஸ்காட்லாந்தின் நிலப்பரப்புகளை ‘பானோராமிக்’ காட்சியாக, விவரிக்க இயலாத அழகுடன் அனைவரின் மனங்களையும் கவரும் இந்த இடத்தைப் பயணிகள் தவறவிடக்கூடாது.

‘Loch Tummel’ என்னும் நன்னீர் ஏரி , சுற்றியுள்ள மலைகள் என்று கண்கொள்ளாக் காட்சியாகப் பிரமிப்பை ஏற்படுத்தும் இயற்கை அழகு அங்கு குடிகொண்டிருக்கிறது. அங்கு வருபவர்கள் இயற்கைக் காட்சிகள் தந்த பிரமிப்புடன் அங்கிருந்து சென்று கொண்டிருந்தார்கள். நாங்களும் சிறிது நேரம் அந்த அழகை ரசித்துக் கொண்டிருந்தோம். மாலைச் சூரியன் கருமேகங்களின் பிடியிலிருந்து வெளியே வர எத்தனித்துக் கொண்டிருந்தான். Loch Tummelன் மின்னும் நீர் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும். வானத்தைப் பிரதிபலிக்க, பசுமையும் அமைதியும் எழிலும் சூழ்ந்த அந்த இடத்திலேயே தங்கிவிட வேண்டும் போல் இருந்தது.

ஸ்காட்லாந்து அரசி அங்கு வந்து அற்புதக் காட்சியை ரசித்துவிட்டுச் சென்றதால் “குயின்ஸ்வியூ” என்று பெயர் பெற்றிருக்கிறது. பெயர்க்காரணத்திற்கு வேறு பல கதைகளும் இருக்கிறது😃.

பல நூற்றாண்டுகளாக அரசகுடும்பத்தாரையும் சாமானியர்களையும் கவர்ந்த இடம். சிறிது நேரத்தில் அங்கே சிறு குழந்தைகளுடன் இரு குடும்பங்கள் சேர்ந்துகொண்டது. சரியான ‘ரெட்டை வால் ரெங்குடுகள்’. பாறையில் சறுக்கி விளையாடுவதும் கீழே விழுந்து புரள்வதும் என்று கலகலப்பாகஇருந்த குழந்தைகள் கொள்ளைஅழகு💖பெற்றோர்கள் கட்டியணைத்தபடி கைப்பேசியில் புகைப்படங்களை எடுப்பதில் மூழ்கியிருந்தார்கள். அந்தக் குழந்தைகளோ பாறைகளில் தாவுவதும் ஓடுவதுமாய் எனக்குத்தான் பயமாக இருந்தது. “இளங்கன்று பயமறியாது” என்பதை அவர்களிடத்தில் கண்டேன்.

மிடுக்கான பாரம்பரிய உடையில் வனக் காவலர் ஒருவருடன் இரு பயணியர் வர, பேச்சு களைகட்டியது. மலைகளில் மரங்களை வளர்த்து வெட்டி இங்கிலாந்திற்கு அனுப்புவதால் நல்ல வருமானம் கிடைக்கிறது என்று கூறினார். அங்கிருந்து தெரியும் தீவுகளைப் பற்றியும் விரிவாகப் பேசினார். நிறைய தகவல்கள். வனக்காவலருக்கு நன்றி கூறி விட்டு மீண்டும் தொடர்ந்தது எங்கள் பயணம்.

“மலைகளில் எங்கு சென்றாலும், நாம் தேடுவதை விட நமக்கு அதிகமாகவே கிடைக்கும்.” இயற்கை ஆர்வலர் ஜான் முய்ர்-ன் கூற்று. மெய்ப்பித்துக் கொண்டே இருந்தது ஸ்காட்லாந்து.

தொடர்ந்த பயணத்தில் இப்பொழுது இருபுறமும் பரந்து விரிந்த மலைகள். நடுவே நீண்டசாலை. கலிஃபோர்னியாவின் ‘Death Valley National Park’ ஐ நினைத்துக் கொண்டோம். நிலப்பரப்பு மாறிக்கொண்டே வர, “Welcome to the Highlands” பலகை வரவேற்க, மூடுபனி தழுவிச் செல்லும் மலைமுகடுகள், மழையில் நனைந்த சாலைகள், மலையடிவாரத்தில் சீறிச் செல்லும் ரயில் என்று அழகுக்காட்சிகளுக்குக் குறைவில்லை.

ஸ்காட்லாந்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஹைலேண்ட்ஸ்ன் கரடுமுரடான அழகு, காலத்தால் அழியாத வசீகரம். பரந்து விரிந்த நிலப்பரப்பில் விரவியிருந்த இயற்கைக் காட்சிகளைக் கண்டுகளிக்க, ஆங்காங்கே வண்டிகளை நிறுத்தும் வசதிகள் வழியெங்கும் இருக்கிறது. கோடைகாலத்தில்அழகு மேலும் மெருகேறியிருக்கலாம். நாங்கள் சென்ற மழைக்காலத்தில் அப்பொழுதுதான் மரங்கள் துளிர் விட ஆரம்பித்திருந்தது. இங்கிலாந்து அரச குடும்பம் விடுமுறையில் வேட்டையாட, இயற்கையை ரசிக்க வந்து செல்லுமிடம். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் தொடர்ந்த அழகுப் பயணத்தில் வண்டியைப் பல இடங்களில் நிறுத்தி இயற்கையை, மலைகளை ரசித்துப் படமெடுத்துக் கொண்டோம்.
இயற்கையுடனே பயணிப்பதாலோ என்னவோ களைப்பே ஏற்படுவதில்லை. கூட்டம், போக்குவரத்து நெரிசல் இல்லாத பயணம். இருட்டுவதற்குள் ஊருக்குச் சென்று விட வேண்டும் என்று நினைத்திருந்தோம். ஒருவழியாக ‘இன்வெர்னஸ்’ நகரை வந்தடையும் பொழுது மணிஏழரை ஆகிவிட்டிருந்தது. நல்லவேளை இன்னும் இருட்டவில்லை.

நாங்கள் முன்பதிவு செய்திருந்த விடுதியில் சிறிது நேரம் ஓய்வுஎடுத்துக் கொண்டோம். நல்ல பெரிய விடுதி. அழகான ஆங்கிலத்தில் மிகவும் பணிவாக வரவேற்ற அலுவலர்கள் இனிமையாகப் பேசினார்கள். அங்கிருந்த வரவேற்பாளரிடம் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றித் தெரிந்துகொண்டோம். அரைமணி நேர தூரத்தில் உணவு விடுதிகளும் நகரின் மையப்பகுதியில் அழகான ஆறும் பழமையான கட்டடங்களும் இருப்பதைக் காண வாடகை வண்டியில் சென்றோம். ஈஷ்வருக்கும் கொஞ்சம் ஓய்வு வேண்டுமே. அதுவுமில்லாமல் அவர் மட்டுமே வண்டியை ஓட்டுவதால்
‘ஸ்காட்டிஷ் விஸ்கி’யைச் சுவைத்துக் கூட பார்க்கமுடியவில்லை என்று வருத்தம்.

வாடகை வண்டியை ஓட்டி வந்தவர் ஒரு பஞ்சாபி. அட! இங்குமா? பதிமூன்றரை வருடங்களாக இங்கிலாந்திலும் கடந்த மூன்று வருடங்களாக ஸ்காட்லாந்தின் இயற்கையும் அமைதியும் தன்மையான மனிதர்களும் பிடித்துப்போய் ஸ்காட்லாந்தில் தங்கிவிட்டதாகக் கூறினார். அந்தப் பகுதியில் இருக்கும் சில இந்திய உணவகங்களையும் பரிந்துரைத்தார். தேவை என்றால் மறுநாளும் வருவதாகக் கூறி விடைபெற்றார்.

எங்கள் பயணத் திட்டத்தில் ‘இன்வெர்னஸ்’ என்ற இந்த ஊருக்கு முதலில் வருவதாக இல்லை. வித்தியாசமான பெயராக இருக்கிறதே என்று கூகிள் செய்து பார்த்தால் பழமையும்,புதுமையும் கலந்த இயற்கை எழில் சூழ்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரம் என்றுஅறிந்துகொண்டோம். அப்புறம் எப்படி விடமுடியும்? எங்கள் பாதையிலிருந்து சற்று விலகி வடக்கே கொஞ்சம் பயணிக்க வேண்டியிருந்தாலும் பார்த்து விடுவது என்று முடிவெடுத்துதான்அங்குச் சென்றோம். எங்கள் நம்பிக்கை வீண்போகவில்லை😇

ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸின் மையத்தில் அமைந்திருக்கும் இன்வெர்னஸ், செழுமையான வரலாறு, பிரமிக்க வைக்கும் நிலப்பரப்புகள் மற்றும் துடிப்பான கலாச்சாரத்தைக் கொண்ட ஒருஅழகிய நகரமாக இருக்கிறது. “ஹைலேண்ட்ஸின் தலைநகரம்” என்று அழைக்கப்படும் இன்வெர்னஸ், ஹைலேண்ட் கவுன்சிலின் நிர்வாக மையமாகவும் சுற்றியுள்ள கிராமப்புறங்களின் அழகுக்கான நுழைவாயிலாகவும் செயல்படுகிறது.

ஸ்காட்லாந்தின் வடகிழக்கு கடற்கரையில் இயற்கைக் காட்சிகளால் சூழப்பட்டுள்ள இந்நகரத்தின் பெயர் கேலிக்மொழியில் “இன்பீர்நிஸ்”(அதாவது, ‘நெஸ் நதி’யின் முகத்துவாரம்) என்பதிலிருந்து பெறப்பட்டுள்ளது. நெஸ் மற்றும் மோரேஃபிர்த் நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளதால் வர்த்தகம் மற்றும் பாதுகாப்புக்கான மையமாகவும் விளங்கி வருகிறது. அயர்லாந்தைப் போலவே ஸ்காட்லாந்திலும் இங்கிலாந்தின் ஆக்கிரமிப்பை எதிர்த்து கடும் போர்களும் எழுச்சியும் நிகழ்ந்துள்ளன. 'ஜாகோபைட்' எழுச்சிகளின் போர்கள் முதல் சுதந்திரப் போர்கள் வரை பல்வேறு வரலாற்று நிகழ்வுகளில் இன்வெர்னஸ் முக்கிய பங்குவகித்துள்ளது.

இன்வெர்னெஸ்ஸில் உள்ள மிகவும் பிரபலமான வரலாற்றுத் தளங்களில் ஒன்று ‘இன்வெர்னஸ் கோட்டை’ ஆகும். ‘நெஸ்’ நதியை நோக்கி அமைந்துள்ள இந்தக் கோட்டை 19ஆம் நூற்றாண்டின் கட்டுமானமாக இருந்தாலும் 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க இடத்தை ஆக்கிரமித்துள்ளது. இன்று, ‘இன்வெர்னஸ் ஷெரிஃப் நீதிமன்றமாக’ செயல்பட்டு வருகிறது. இந்தக் கோட்டையில் ‘மேக்பெத்’ கதாபாத்திரம் அரசரைக் கொல்வதாக ஷேக்ஸ்பியர் தன்னுடைய நாடகத்தில் இன்வெர்னெஸ்ஸைக் குறிப்பிட்டுள்ளார்.

நகரின் மையப் பகுதியில் ‘நெஸ்’ நதி செல்கிறது. கரையின் இருபுறமும் அழகான வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டடங்கள் ,பார்வையாளர்களை ஈர்க்கும் விக்டோரியன் கட்டிடக் கலை, சிறு மலையின்மீது ‘இன்வெர்னஸ் கோட்டை’ என கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் ஒன்றாக இணைத்து பார்வையாளர்களின் இதயங்களைக் கவரும் எழில் மிகு நகரம். ஆற்றங்கரைகளில் அழகான கடைகள், கஃபேக்கள் மற்றும் பப்கள். நாங்கள் சென்ற வேளை மாலை நேரம் என்பதால் கற்கள் பதித்த தெருக்கள் அமைதியாக இருக்க, உணவு விடுதிகளில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. விடுமுறை நாள் என்பதால் இசையை ரசித்துக் கொண்டே மதுபானங்களை அருந்தியபடி அமர்ந்திருந்த கூட்டத்தைக் கண்டதும் நாங்களும் ஒரு உணவகத்திற்குள் நுழைந்தோம்.



துள்ளலான இசையை தன்னுடைய வயலினில் அசாத்தியமாக இசைத்துக் கொண்டிருந்த கலைஞன் அங்கிருந்த ஆண்களையும் தன்னுடைய இசையால் வசீகரித்துக் கொண்டிருந்தார்😍.பாரம்பரிய உடையில் இருந்தவரின் வயலின் இசையுடன் கிட்டாரும் சேர்ந்து கொள்ள, கொண்டாட்டமாக இருந்தது. ரசனையுடன் இருக்கிறார்கள் மனிதர்கள்! ஐரிஷ் இசையைப் போலவே துள்ளலான இசை. கேட்பதற்கு இனிமை.

ஆசை யாரை விட்டது? ஈஷ்வருக்கும் ஸ்காட்டிஷ் விஸ்கியை சுவைக்கும் சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது. விடுவாரா மனிதர்? இரவு உணவை முடித்து விட்டு அங்கிருந்த கடையில் சில பழங்களை வாங்கிக்கொண்டு விடுதிக்குத் திரும்ப வாடகை வண்டிக்காகக் காத்திருந்தோம்.

அந்தக் கடை வாசலில் போதைக்கு அடிமையான பெண்ணை வயதான இன்னொரு போதை ஆசாமி ஆசை வார்த்தைகள் கூறி அழைக்க, அந்தப் பெண்ணும் அவருடன் சேர்ந்து செல்ல கிளம்புகையில் அவளுடைய நண்பர்களோ அல்லது தெரிந்தவர்களோ வேகமாக வந்து அவளை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். போதை மருந்து ஸ்காட்லாந்தையும் விட்டு வைக்கவில்லை! அந்தப் பெண்ணை நினைத்து வருந்தியபடி விடுதி வந்து சேர்ந்தோம்.

விடுதியில் சந்தித்த நபர்களுடன் பேசிக் கொண்டிருக்கையில் மேலும் சில விஷயங்களை அறிந்து கொண்டோம். உள்ளூர் நிகழ்வுகள் அனைத்தும் ஹைலேண்ட் கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் ‘கேலிக்’ மரபுகளை கொண்டாடுகின்றன. நட்புக்குப் பெயர் பெற்ற இன்வெர்னெஸ் மக்கள், பார்வையாளர்களை இருகரங்களுடன் வரவேற்கிறார்கள். மெல்லிசையும், இயற்கை அழகும், நெஸ்நதியும், பொலிவுடன் நிமிர்ந்து நிற்கும் கட்டடங்களும் மனதை நிறைக்க, நகரின் பெயரைப் போலவே அன்றைய அனுபவமும் புதுமையாகஇருந்தது.

நகரின் தெற்கே இருக்கும் ‘Loch Ness’ நதியில் ‘மான்ஸ்டர்’ ஒன்று மறைந்துள்ளதாக மர்மகதை ஒன்று அங்கே நிலவுகிறது. சரியான ‘புரூடா பார்ட்டிகள்’ போலிருக்கே என்று நினைத்துக் கொண்டேன். படங்களில் குட்டி டைனோசர் போன்ற உருவத்தை வரைந்திருக்கிறார்கள். செல்லமாக ‘நெஸ்ஸி’ என்றும் அழைப்பார்களாம். என்னவோ போடா மாதவா😐இந்தக் கதை உனக்குத் தெரியாதா? ஸ்காட்டிஷ் மக்கள் அப்படித்தான் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று இவர் வேறு கூற, காலையில் எழுந்தவுடன் முதலில் அங்குதான் செல்கிறோம். நெஸ்ஸியைப் பார்க்கிறோம் என்று அடுத்த நாள் பயணத்திற்கான திட்டத்தைக் குறித்துக் கொண்டோம்.

மேற்கிலும் ‘ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்’ தொடரும் என்று அப்பொழுது எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

அமேசிங் பிரிட்டன் -8- சௌத்போர்ட்- பிரிஸ்டல்- பாத் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 316ல் வெளிவந்துள்ள பயணக்கட்டுரைத் தொடரின் எட்டாம் பாகம்.  சௌத்போர்ட்- பிரிஸ்டல்- பாத் பயணக்குறிப்புகள்   பயணங்களில் நம்மை அறிய...